பக்கம்:ஈரோட்டுத் தாத்தா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

சுமைசுமையாய் மறவரெலாம் தனக்கிட்ட
   மாலைகளைத் தூக்கி வந்து
எமதுபெருந் தலைவரே என் றடிபணிந்து
   மாலைபடைத் தெழுந்தார் செல்வம்!

மலைபோலும் மலர்மாலை தனைப்பன்னீர்ச்
   செல்வம்அவர் மதிப்பு வாய்ந்த
தலைவர் சிலை முன்படைத்த போதிலங்குக்
   கூடிநின்றோர் தாத்தா உள்ள
நிலைநினைந்தார். உளம்நொந்தார்! அருவிஎனக்
   கண்களினால் நீர் பொழிந்தார்!
தலைவணங்கிப் பெரியாரே தலைவரென
   உறுதிசொன்னார் தமிழ்நாட் டிற்கே!

ஓயாத உழைப்புத்தான் உடல்நலத்தைக்
   காப்பாற்றும்! உழைப்புக் கெட்டால்
நோயாகும் உடல்மெலியும் இவ்வியற்கை
   முறைப்படியே நோய்வாய்ப் பட்டுப்
போய்விடுமோ உயிரென்று தமிழரெலாம்
   ஏங்குகின்ற போதில் நாட்டின்
தாய்போன்றான் தந்தைதனை விடுதலைசெய்
   தரசியலார் தமிழர்க் கீந்தார்!

நோயோடு வெளிவந்தார் விரைவில்தன்
   வலிகுறைத்த நோய்ப றக்க
ஓயாமல் உழைத்திட்டார்! ஊரெல்லாம்
   தன் கொள்கை உரைத்து வந்தார்!
தீயாரின் அரசியலை மதமாயை
   தனையொழிக்கத் திட்டம் சொன்னார்!
பாயாத புதுவெள்ளம், பரவாத
   பெருநெருப்புப் பார்த்த துண்டோ?