ஈஸ்வர...
95
எதுவும் சொல்லாமல் உட்கார்ந்திருக்கிறாள் லட்சுமி. நிமிர்ந்து இவனையே இவனையே பார்க்கிறாள். பார்வையின் தீவிரம். சலனமற்ற விழிகள் இவனையே அலுங்காமல் பார்க்கின்றன.
குழப்பமாக இருந்தது வேல்க்கனிக்கு.
‘என்ன நினைக்கிறாள் இவள்?’
அவனது சீற்றம் நின்றுபோயிருந்தது. குரலின் உஷ்ணம் தணிந்திருந்தது. சற்றே நிதானித்தான்.
“மானங்கெட்ட பொழைப்பு பொழைக்க வேண்டிய அவசியமில்லே நமக்கு. நாம ஒண்ணும் கதிகெட்டுப் போயிருக்கலே. உங்க அண்ணங்கிட்டே கையேந்துற அளவுக்கு நாம வழியத்துப் போகலே... வேணும்னா சொல்லு... பச்சைச் சேலை மாதிரி பத்துச் சேலை எடுத்துத் தாரேன்” என்று ரோஷாக்னியோடு கையை நீட்டி நீட்டிப் பேசிக்கொண்டிருந்த வேல்க்கனியின் வேகம், லட்சுமியின் மௌனத் தீவிரத்தில் மட்டுப்பட்டிருக்கிறது. ஆனால், மடிந்து விடவில்லை.
லட்சுமியின் மனசுக்குள் பெரும் போர்க்களம்.
அடுப்புக்குள் விறகைத் திணித்தாள் லட்சுமி. சோறு ஒரு அடுப்பிலும் குழம்பு ஒரு அடுப்பிலும் கொதித்துக் கொண்டிருந்தது. அரைத்த மஞ்சள் நிற வெளிச்சமாகவும் வெக்கையாகவும் இருந்த தீயின் நாக்குகளையும் உற்றுப் பார்க்கிறாள்.