பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

47


“சோற்றால் அடித்த சுவரு. ஆக சோறில்லா விட்டால் போகுமே உயிரு” என்ற வினோதமாகப் பாடுவார்கள். என்றாலும் அது நிதர்சனமான உண்மைதான்.

“ஒரு சாண் வயிறு இல்லாட்டா நம்ம உயிரை வாங்குமா பரோட்டா” - என்று கேலியாகப் பாடி, உடலில் மையமாக இருக்கும் வயிற்றைப் பற்றி வக்கிரமாகக் குறிப்பிடுவதுண்டு.

சாப்பாடு என்கிற வார்த்தையிலே சகல வாழ்க்கை இரகசியங்கள் முழுவதும் அடங்கியிருக்கிறது. இந்த இரகசியத்தை அறிந்து கொள்கிறபோதுதான் ஒரு மனிதன், தெளிவாகவும், பொலிவாகவும், வளமாகவும், நலமாகவும், நோய்கள் அணுகாமலும் நிறைவாக வாழ்கிறான்.

அப்படி என்ன இரகசியம் சாப்பாட்டில் ஒளிந்து கொண்டு இருக்கிறது என்றால், அதுதான் அதிசயமான நன்மை பயக்கும் இரகசியமான உண்மை.

சாப்பாடு என்றால் உணவுதான் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சாப்பாடு என்றால் சகல சுவையும் கொண்ட விருப்பமான பண்டமென்று தான் எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் சாப்பாடு என்றதும் ஆளாய்ப் பறக்கிறார்கள்.

அதற்காகச் சண்டை போடுகிறார்கள். நடுத் தெருவிலே நின்று கூச்சல் போடுகிறார்கள். சமயத்திலே கொடும் சண்டையாகவும் அது மாறிப் போவது உண்டு.