பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

63



உறக்கம் என்பது உடலுக்கு என்ன செய்கிறது. மனதுக்கு என்ன செய்கிறது என்பதை நாம் கட்டாயம் தெரிந்து கொண்டாக வேண்டும்.

உடல் அயர்ந்து உறங்குவதால் உறுப்புக்களுக்கு, உழைப்பால் ஏற்பட்ட களைப்பும், இழப்பும் எல்லாமே மாறி, ஒரு புதிய தெம்பை உண்டு பண்ணுவதாக அமைந்திருக்கிறது.

உழைப்பால் திசுக்கள் சேதம் அடைகின்றன. பழுதடைகின்றன. பங்கப்படுகின்றன. பணியில் ஈடுபடும் வேகத்தை இழக்கின்றன. பார்த்துப் பெருமைப் பட வைக்கிற உடலின் வலிவையும், வனப்பையும் உருமாற்றிவிடுகின்றன.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவர் நன்றாக அயர்ந்து உறங்கும்போது அங்கே ஆழ்ந்த சுவாசம் ஏற்படுகிறது. தேவையான திசுக்கள் பகுதிகளுக்கு இரத்த ஒட்டம் தேடி வருகிறது.

அங்கே பிராண வாயு கலந்த தூய இரத்தத்தைத் திசுக்கள் மேல் பொலிந்துவிட்டு, அவற்றில் சேர்ந்திருக்கும் அழுக்குகளையும், கேடுகளையும் இழுத்துக் கொண்டு போகிறது. இப்படிப்பட்ட பணிமாற்றத்திற்குத்தான் ஆழ்ந்த உறக்கம் தேவை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

வள்ளுவர் கூட உறக்கத்தைப் பற்றி மிகத் தெளிவாகப் பாடியிருக்கிறார். எப்படி உறங்க வேண்டும் என்று வற்புறுத்தியே சொல்லியிருக்கிறார்.