பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

19



கல்விக்கு சில விளக்கங்கள்

1. கல்வி என்றால் பொதுவாக, அறிவு என்றே பலர் கூறி விடுகின்றனர். அதுவே பொதுஜன அபிப்பிராயமாகவும் இருந்து வருகிறது.

2. கல்வி என்பது தனிப்பட்ட மனிதர்களின் திறமைகளையும், கலாச்சாரப் பண்பாட்டையும், நல்லொழுக்கக் குணங்களையும் வளர்த்து, நன்னெறியில் நடத்திட உதவுகிறது என்றும் விளக்கம் அளிக்கிறார்கள் சிலர்.

3. கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் பட்டம் பெற்றிடவும், அதற்கேற்ப வேலை பெற்று, சம்பாதித்து வாழ்க்கை நடத்த உதவும் ஒரு முயற்சி என்று கூறுபவர்களும் உண்டு.

4. கல்வி என்பது வாழ்நாளைக் கவலையின்றி ஒட்டிச் செல்ல உதவுகிற ஒரு மோகனமான வாகனமாகும் என்று அழகு படுத்திப் பேசுவோரும் உண்டு.

யார் எப்படி விளக்கம் கூறினாலும், கல்வியானது ஒரு குறுகிய நோக்கத்துடன் மக்களுக்குப் பணியாற்ற வில்லை என்பது மட்டும் உறுதி

ஒவ்வொரு மனிதனையும் சமுதாயத்தின் ஒரு சக்தி மிக்க அங்கமாக ஆக்க, திறம் மிகுந்த சமுதாயத் தூண்களாக உருவாக்கவே கல்வி முயல்கிறது.

தனிப்பட்ட ஒருவரின் சுகம், சுகாதாரம், நலம், நல்ல ஒழுக்கங்கள் இவற்றை வளர்க்கவும், அதே சமயத்தில், ஒரு சமுதாயத்தின் செழிப்பு மிக்க வளர்ச்சியை ஏற்படுத்தவும் இலட்சியப் பணியாக, கல்விதான் தன் பயணத்தை மேற்கொண்டு வருகிறது.வளர்கிறது.