பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

உடற்கல்வி என்றால் என்ன?



அதனால்தான், கல்வியானது சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மதிக்கப்பெற்று வளர்க்கப்பெறுகிறது. அதுவும் மனிதர்களைப் புனிதர்களாக மாற்ற உதவிக் கொண்டு வருகிறது.

சமுதாயத்தில் கல்வி

ஒரு சமுதாயத்திற்கு ஒப்பற்ற பெருமையாக விளங்குகிறது கல்வி என்பதால் தான், சமுதாயத்தில் வளர்ச்சிபெற விரும்புகிறவர்கள், வளர்ச்சி பெற்றவர்கள் எல்லோரும் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப, கல்வியைப் பற்றி விளக்கம் கூறுகின்றார்கள்.

இந்தியாவில் இருந்த பல்வேறுபட்ட சமுதாய சூழ்நிலைகளில், எப்படி எப்படியெல்லாம் கல்வி விவரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கீழ்வரும் கருத்துக்கள் உங்களுக்குத் தெளிவாக விளக்கும்.

1. “கல்வி என்பது ஆத்மாவின் வளர்ச்சிக்காக மட்டும் உழைக்காமல், அறிவை வளர்க்கவும், அதன் மூலம் மனதைக் கட்டுப்படுத்தி வைக்கின்ற ஆற்றலை வளர்க்கவும் உதவுகிறது.” (இந்தியக் கல்வி முறை).

2. “கல்வியானது ஒரு மனிதரை தன்னம்பிக்கை உடையவராக உருவாக்கி. அதே சமயத்தில் சுயநல மற்ற மனிதராகவும் வாழச்செய்கிறது.” என்கிறது ரிக்வேதம்.

3. கல்வியின் நோக்கமானது மனித உயிர்களுக்கு ஆத்ம விடுதலையை அளிப்பதாகும் (உபநிஷதம்).

4. கல்வியானது ஒருவரை ஒழுக்க சீலராக உருவாக்கி, இந்த உலகத்திற்கு உபயோகமுள்ள மனிதராக வாழ்விக்கும் மேன்மையான பணியை ஆற்றுகிறது என்கிறார் யக்ஞவாக்யா.