பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

223


செய்வதிலே அடைகிற இன்பமே விளையாட்டில் ஈடுபட வைக்கிறது என்ற கருத்துக் கொள்கையாக வடித்துத் தந்தவர் ஸ்டேன்லிஹால் என்பவர்.

மிகுதி ஆற்றல் இருப்பதால் மக்கள் விளையாடவில்லை. எதிர்கால வாழ்க்கைக்குத் தங்கள் ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காகவும் விளையாடவில்லை. பொழுதை போக்கிடவும் விளையாடவில்லை.

தங்கள் மூதாதையர் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் நினைவுபடுத்தி, தாங்களும் செய்து பார்ப்பதிலே சுவை ஏற்படக் கண்டு, தொடர்ந்து செய்கிறார்கள். அவைகள் விளையாட்டுக்களாக பரிணமித்திருக்கின்றன.

மனிதர்கள் எதிர்கால வாழ்க்கைக்காக ஒத்திகை பார்க்கவே விளையாடுகின்றார்கள் என்ற கொள்கையையும் ஹால் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கடந்த காலத்தைக் கருத்தில் ஏற்றுக்கொண்டு கண்ணுக்கு நேரே செய்து களிக்கிறார்கள் என்று கூறிய அவர் தன் கருத்துக்கு ஒரு சான்றையும் எடுத்துக் காட்டுகிறார்.

இன்றைய மக்கள் நாகரிகத்தில் திளைத்தாலும், அவர்கள் வாழ்க்கை ஆதிகால மக்கள் நடத்திய செய்முறைகளிலிருந்து முற்றிலுமாக விடுபடாமல்தான் தொடர்கிறது. வேட்டைக்குச் சென்றது, வில் அம்பைப் பயன்படுத்தியது.நீந்தியது, ஒடி ஒளிந்து விளையாடியது, விரட்டிப் பிடித்தது, கல்லெறிந்தது, குகைகள் கட்டியது உறங்கப் பாதுகாப்பு இடம் உருவாக்கிக் கொண்டது போன்ற பழைய காரியங்களின் பிரதிபலிப்பாகவே இன்றைய நிகழ்ச்சிகள் நம்மிடையே நிறைந்துள்ளதை ஹால் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.