பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

83




அப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான பெருந்தசைச் செயல்கள் மூலமாக, மக்களிடையே விளையாட்டுப் பெருந்தன்மைகளை வளர்த்து, நீதி, நேர்மை, நாணயம் ஒழுங்கான ஆட்டம், வீரம், நம்பிக்கைக்குரியவராக வாழ்தல், கீழ்படிதல், பணிவுடமை போன்ற அற்புத குணங்களையும் உடையவர்களாக மாற்ற முயல்கிறது.

உளவியல் மூலமாக உடற்கல்வி செயலாற்றுகிறது என்பதை ஸ்காட் (Scot) என்ற அறிஞர் 7 தலைப்புகளில் பிரித்துக் காட்டுகிறார். அவற்றையும் அறிந்து கொள்வோம்.

1. உடற்கல்வி மூலமாக மனிதரின் நடை முறைப் போக்கு (Attitude) மாறுகிறது.
2. சமூகத்தில் சமர்த்தாக நடந்து கொள்ளும் சாமர்த்தியம் அதிகமாகிறது.
3. ஐம்புலன்களின் செயலாற்றல் விருத்தி யடைகிறது. அதாவது காண்பதில், கேட்பதில், விரைவாக செயல்படுவதில் ஆற்றல் மிகுதியாகிறது.
4. நலமான உடல், அமைதியான மனம் பெற உதவுகிறது. நல்ல சலனமற்ற மனம். உடல் சக்தியை அதிகப்படுத்துவதுடன், விளையாடுவதற்கேற்ற விருப்பத்தையும், மனோகரமான மனப்பாங்கையும் அளிக்கிறது.
5. உழைத்த நேரம்போக மேற்கொள்கின்ற ஓய்வும் சரியாக அமைகின்றது. தசை விறைப்பு, தசைபடபடப்பு, மன பதைபதைப்பு போன்றவற்றிலிருந்து எளிதாக விடுபட்டு இதமாக நேரத்தைக் கழிக்கும் இனிமையான சூழ்நிலையைப் பெற்றிட உடற்கல்வி உதவுகிறது.