பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

93


கைக்கேற்ப, அனுசரித்துக் கொண்டு, அறிவார்ந்த முறையில் செயல்பட வைக்கின்றது.

தேவையானவற்றை மட்டுமே மனம், மனதில் தேக்கி வைத்துக் கொள்கிறது. தேவையல்லாதனவற்றைத் துாக்கி எறிந்து விடுகிறது.

அதனால், மனித நடத்தையானது. அனுபவங்களினால் விரிவடைகிறது. விளக்கம் பெறுகிறது. சுற்றுப் புற சூழ்நிலைக் கேற்ப சுமுகமாக நடந்து கொள்ளும் சுகமான இயல்பையும் வளர்த்துக்கொள்கிறது.

ஆகவே, எந்த வழியில் மனிதர்கள் நினைத்தாலும், செயல்பட்டாலும், அது ஒரு இலட்சியத்தை நோக்கியே முன்னேறிப்போகிறது. அந்த இலட்சியம் தான், ‘மகிழ்ச்சியான வாழ்வு’ என்பதாகும்.

கல்வி தரும் கண்ணோட்டம்

இன்றைய கல்வி முறை, மகிழ்ச்சியான வாழ்வளிக்கும் முறைகளை வழங்கி, மனிதர்களை மதி நிறைந்தவர்களாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. இந்தக் கல்வியின் பாடத்திட்டம், செயல் திட்டம், இயற்கையை, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் ஏற்றமிகு திட்டங் களாகவே இருப்பதால், இன்றைய சமுதாயத்தை இப்பொழுது வலிமைப்படுத்தவும், நாளைய பரம்பரையை நன்றாக வாழ்விக்கவும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

பொதுக்கல்வியின் சிறந்த பகுதியாக விளங்குவது உடற்கல்வி என்பது நாமெல்லாம் நன்கு அறிந்த ஒன்றே.

சிறந்த மனம் வேண்டும் என்பது தான் வாழ்வின் இலட்சியம் என்றால், அதற்கு சிறந்த வலிமையான தேகம் வேண்டும் அல்லவா? அந்த அரும்பணியைத் தான் உடற்கல்வி மேற்கொண்டு தொடர்கிறது.