இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2
உடலும் உணவும்
உணவே வா! வா!!
- சோற்றால் அடித்த சுவரு - இந்த
- சோறில்லாட்டிப் போனா போகுமே உசுரு!
என்று நாட்டுப் பாடல் ஒன்று பாடுகிறது.
மக்களுக்கு சோறு தான் மாபெரும் பேறு. இந்த உணவு தான் உறக்கத்தில் கனவாகவும், புழக்கத்தில் நினைவாகவும் இருந்து மக்களை ஊக்குவிக்கின்றது. உற்சாகப் படுத்துகின்றது. ஒட்டிவிடுகின்றது. பல சமயங்களில் வாட்டியும் விடுகின்றது.
வயிற்றுக்கு உணவில்லை என்றால் வறுமை நிலை. அதுவே சிறுமை நிலை. தாங்கள் விரும்பிய உணவை விரும்பிய வாறே உண்ணுவோருக்கு சமுதாயத்தில் ஒருவித பெருமை நிலை. அவர்களுக்கே முதன்மை நிலை.
இல்லாமையும் இயலாமையும் தான் மனித குலத்தை பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. வேறுபடுத்திக் கொண்டிருக்கிறது. காரணம் பொல்லாத இந்தப் பணம் தான்.