பக்கம்:உத்தரகாண்டம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130   ✲   உத்தரகாண்டம்


உள்ளே கூட்டிச் சென்று, இலை போட்டு, வாழைக்காய்ப் பொரியலும் பருப்புக் குழம்பும் நெல்லுச் சோறுமாகப் பிசைந்து போட்டாள். தேவதைக் கதைகளை யாரும் அவளுக்குச் சொன்னதில்லை. ஆனால் ஒரு தேவதை அவளுக்குத் தாயாக இருந்து, பாதுகாத்தாள். அன்று சாப்பிட்ட உடனே, பழைய சேலை மடிப்பில் அம்மா படுக்க வைத்ததும் தூங்கிப்போனாள். எத்தனையோ நாளைய ஆதரவற்ற, பயம், வயிற்றுப்பசி, எல்லாம் அந்த தேவதைக் கையால் நீங்கிவிட்டன. அந்த வீட்டில் அவள் பல விஷயங்களைப் புரிந்து கொண்டாள். பெரியவருக்குப் பெண்சாதி முதலிலேயே இறந்துவிட்டாள். இரண்டு மகன்கள், இவள் ஒரு மகள். மகன்கள் இருவரும் படித்து, டில்லி பம்பாய் என்று கல்யாணம் கட்டி வேலையில் இருந்தார்கள். கமலி இவருடைய அண்ணன் மகள். இவளை, பத்து வயசுக்குள், வீட்டில் எடுபிடி வேலை செய்ய வந்த தாமுவுக்குக் கட்டிவிட்டார். தாமுவை அவர்தாம் படிக்க வைத்தார். தாமுவுக்கு அக்கா முறையில் ஓரம்மாள் அங்கே அடிக்கடி வந்து அதிகாரம் செய்வாள்.

கமலி, உள்ளூர் பள்ளிக்கூடத்தில் நாலாவது படித்துக் கொண்டிருந்தாள். தாமு, சம்பகாவின் புருசன், வக்கீல்... வாசல் பக்கம், கலகலவென்றிருக்கும் நடையில் மாடிப்படி. மாடிக்கு யார் யாரோ கட்சிக்காரர்கள் வருவார்கள். சீனு அய்யர் குமாஸ்தா. வீட்டில் பெரிய வில்வண்டி இருந்தது. கிழவர் வாசல் மேல் திண்ணை, கீழ் திண்ணை, முன்பக்க அறை இத்துடன் நிறுத்திக் கொண்டார். கொல்லைப்புறம் போக வேண்டுமானால்தான் காதில் பூணூலை மாட்டிக் கொண்டு போவார். அந்த சமயம் அவள் எங்கேனும் மூலையில் ஒண்டிக் கொள்வாள். அம்மாவைப் பார்க்க, கதரணிந்த இளம்பிள்ளைகள் வருவார்கள். நிறைய புத்தகங்கள் கொண்டு வருவார்கள். கமலி இவளை விடப் பெரியவள். அம்மா இவளுக்கும், தமிழ், இங்கிலீசு எல்லாம் கற்றுக் கொடுத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/132&oldid=1049814" இலிருந்து மீள்விக்கப்பட்டது