பக்கம்:உத்தரகாண்டம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   131


வக்கீலையா, மாடியில் இருந்து இறங்கி, வீட்டைச் சுற்றிச் செல்லும் சந்து வழியாகவே பின் பக்கம் போவார். அவருக்கென்று குளியலறை ஒன்று இருந்தது. மாரிமுத்து என்ற வண்டிக்காரன் அநேகமாக வீட்டோடு இருந்தான். அவன்தான் அவருக்கு வெந்நீர் போட்டு, துணிதுவைத்து, வண்டியோட்டிக் கச்சேரிக்குக் கூட்டிச் சென்று எல்லா வேலைகளும் செய்தான். கமலியும் அவரும், கூடத்தில் ஒரு பக்கம் படுத்துக் கொள்வார்கள். ஊஞ்சல் பலகையில் அம்மா படுப்பார். விசுபலகை ஒன்று உண்டு. அவளுக்கு அப்போது எதுவும் புரிந்து கொள்ள வயசாகவில்லை. அய்யர் வீட்டு நடைமுறைகளைப் பற்றி எதுவும் தெரிந்திராததால், சாப்பாடு, துணி, அன்பு, புழங்க பெரிய இடம் எல்லாம் கிடைத்த எதிர்பாராத சந்தோச மூச்சு முட்டலில் பழகியபின் இவள் புரிந்து கொண்ட செய்திகள்...

கிழவர் ஒரு நாள் தவறாமல் இவளைப் பார்க்க நேர்ந்து விட்டால், பறப்பீடை, தொலைஞ்சு போடி, திமிரு திமிரு... என்று கத்துவார். அவள் பின்புறம் கொட்டிலில் சென்று ஒட்டிக் கொள்கையில் அம்மா உடனே வந்து விடுவார்... “அவ ஒண்னும் பீடையில்ல. இந்த வீட்டுக்கு நல்லது வந்திருக்கு. கண்ணம்மா, நீ பயப்படாதே! அந்தக் கிழம் இப்படி எதை வேணாச் சொல்லட்டும். உன்கிட்ட வராது...” என்று தேற்றுவாள்.

இவள் வந்து தீட்டுப்பட்ட வீட்டில், அவர் சாப்பிடுவதில்லை. அவருக்கு, தலை மொட்டையடித்த, வெள்ளைச் சீலை அம்மா சாப்பாடு கொண்டு வந்து வாசல் அறையிலேயே கொடுப்பார். அந்தக் கூடத்தில் சாமிபடங்கள், பூசை சாமான்கள், விளக்கு எல்லாம் இருந்தன. எல்லாமும் வாசல் அறைக்குப் போய்விட்டன. சீனு அய்யர்தான் கிழவருக்கும் எடுபிடி. கிழம் கந்து வட்டிக்குக் கடன் கொடுக்கும். ஏழை எளியதுகளின் இரத்தம் உறிஞ்சுவது போல் வட்டி வாங்கும், என்பதெல்லாம் அம்மா அதைத் திட்டும்போது உதிர்ந்த உண்மைகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/133&oldid=1049815" இலிருந்து மீள்விக்கப்பட்டது