192 ✲ உத்தரகாண்டம்
“ஏய், அநு இல்ல? எப்ப வந்தே?” நீ முடிய வெட்டிட்டாலும் சாடை மாறிடுமா?... கிரண் எப்படி இருக்கிறான்? குழந்தை... நிசா இல்ல? குழந்தையக் கொண்டு வரலியா?”
“ராதா பத்திக் கேள்விப்பட்டேன், கஷ்டமா இருக்கு மாமா, கிரன் பார்டர்ல இருக்கார். எனக்கு போரடிச்சிப் போச்சு. குழந்தையோட தான் வந்திருக்கேன். உங்க குருகுலத்துல எனக்கு இப்ப அவசியமா வேலை வேணும். தரீங்களா?...
“என்னம்மா இப்படிக் கேட்டுட்டு? உனக்கில்லாத வேலையா?”
“அப்பா எப்படி இருக்காங்க?...”
“இருக்காங்க. சின்னண்ணா, அக்கா யாரோடும் ஒத்து வரல. அம்மா எல்லாத்துக்கும் ஈடு குடுத்திட்டிருந்தா. இவரால யாரோடும் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாது... சரி, மாமா, குழந்தைய அங்கேயே ஹோம்ல விட்டுட்டு வந்தேன்...”
“நீயும் அங்கேயே தங்கிக்கிறியா?...”
“ஆமாம். எனக்கு அந்தச் சூழல் புடிச்சிருக்கு...”
பேசிக் கொண்டே அவர்கள் காரிலேயே ஏறிக் கொண்டு போனாள்.
அந்தத் தடவை மகளை வாரிக் கொடுத்து விட்டுத்தான் அவர்கள் வந்தார்கள். சோலையில் பாய்ந்த மின்னல், இளநீர் குலுங்கும் மரத்தைக் கருக்கிவிட்டாற் போல் துயரம் படிந்தகாலம். துயரம் விசாரிக்க வருபவர்கள் மாற்றிமாற்றி சோகக் குழியைக் கிளர்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அரசியல் சூழலும் ஏதோ கிரகணம் பிடித்தாற்போலிருந்தது. இந்திரா காந்தி ஆண்ட நாட்களில் ஏற்பட்ட நெருக்கடிகளில் அவர்கள் மிகவும் மனம் நொந்து சோர்ந்தனர்.
அன்று காலை... ஆனி, ஆடி என்று நினைவு. விடியும் நேரத்தில் முன் வாசல் தெளித்துப் பெருக்கிக் கொண்டிருந்தாள். சோகம் சுமக்கும் வீடாதலால் கோலம் போடுவ