242 ✲ உத்தரகாண்டம்
விடுவதாக, அவள் அம்மா சொல்லி வருந்தினார்களாம். ஏதோ, நகை, பாத்திரம் என்று சேகரித்து வைத்திருக்கிறாளாம். தான் கண் மூடுமுன் கெட்ட பழக்கம் எதுவும் இல்லாத நல்ல பையனைப் பார்த்து ஒப்புவிக்க வேண்டும் என்று இருக்கிறார்களாம்.
“சுப்பய்யா, சங்கரி ரொம்ப நல்ல பெண். இங்கே வந்து தான் தமிழ் ஸ்கூலில் எஸ்.எஸ்.எல்.ஸி. முடித்தாள். உனக்கும் ஒரு துணை. அவளுக்கும் ஓர் ஆதரவு. மாட்டேன்னு சொல்லாம ஏத்துக்கப்பா...ன்னு சொன்னாங்க.”
அவன் கண்களில் நீரருவி வழிகிறது.
சூடுபட்ட குரங்கு போல் அவன் அந்த இடத்தைவிட்டு அடுத்த வாரமே காலி பண்ணிக் கொண்டு வேறு பேட்டைக்குப் போனான். அங்கிருந்து பஸ்ஸில் பள்ளிக்கூடம் வருவான். யார் கண்ணிலும் படக் கூடாது என்ற மாதிரி ஓடிப்போனான்.
ஒருநாள், பஸ்ஸில் சுக்டன்கர் அவனைப் பார்த்து விட்டார்.
“சுப்பய்யா!” என்று கத்திவிட்டு அவன் இறங்கும் இடத்தில் இறங்கினார்.
“என்னப்பா? என்ன ஆச்சு, உனக்கு? எதுக்காக இப்படி ஓடுற?... இப்ப நாங்கல்லாம் கல்யாணம் பண்ணிட்டு குடும்பம்னு சுகமா இருக்கலியா? உனக்கு என்ன பிரச்னை?” என்று கேட்டார். அவன் அறைக்கு வந்தார். ஏதேதோ ஊகங்களைக் கிளப்பி அவனைச் சந்தேகக்கண்ணால் ஆராய்ந்தார்.
“ஒ, அதெல்லாம் இல்ல சார், என்னை மன்னிச்சிடுங்க. கல்யாணம் குடும்பம்னு இல்லாம, ஆசாரிய வினோபாபாவே போல மனித குலத்துக்கு சேவை பண்ணனும்னு...”
அவர் ஆத்திரத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு போனார். பிறகு, சுக்டன்கர், மகள் வீட்டுக்குச் சென்ற