264 ✲ உத்தரகாண்டம்
இவள் சங்கடப்படுகிறாள். அவள் நினைத்து வந்த இலக்கு இப்போது இன்னும் சிக்கலாக இருக்கிறது. என்றாலும், இப்போது முடிவெடுக்க முடியாது. “நா, நாளைக்குக் காலம வரேன் அநும்மா, அங்க ஆளுவ வந்து மரம் வெட்டிட்டிருந்தானுவ. ஆள்தான் பாத்துக்கறான். நா, உதவாம என்ன செய்யப் போற? கடசீ காலத்துல, அந்தத் தம்பி...”
நெஞ்சு கமறிக் கண்ணீர் தழுதழுக்கிறது.
“சொக்கத்தங்கம். இந்தக் கேடு கெட்ட உலகத்துல, இப்பிடி ஒரு மனிசன் இருக்க முடியாதுன்னு ஆண்டவன் அழச்சிட்டாருன்னு நெனப்பே... விதி... விதிம்மா!... பக்கத்துல தோட்டம் போட்டு கிளி கொஞ்சும். ஒரு நாயி. சக்தின்னு பேரு. வாரா வாரம் பஜனைல வந்து அருமையாப் பாடுவாரு. பானைய வச்சிட்டு தாளம் தட்டுவாரு... உடம்புகென்னு தெரியாத பேச்சேம்மா...!” என்று வருந்துகிறாள்.
குழந்தைகள் டாடா காட்டி விடை கொடுக்க, ‘நாளவரேன்’ என்று சொல்லி வெளி வருகிறாள்.
இருட்டு வரும் நேரம். அவள் சூழலின் நினைவின்றி நடக்கிறாள்.
பின்னால் விடுவிடென்று சத்தம் அவளைத் திரும்பிப் பார்க்கச் செய்கிறது...
“மாதாஜி, பிரணாம். நான்தான்!” தாடி, தலைப்பா... “அமாரின் அப்பா.”
“நான் கூடவரேன். இருட்டிப் போச்சி. வழியில கண்ட கஸ்மலங்கள்...”
அவள் சிரிக்கிறாள். “சிங்கு, நீங்க இந்தத் தமிழெல்லாம் பேசுறீங்க?” அவனும் சிரிக்கும் ஒலி கேட்கிறது. “கஸ்மலம்’ங் கறது சமஸ்கிருத வார்த்தை மாதாஜி. அப்படின்னா அழுக்கு,