288 ✲ உத்தரகாண்டம்
“எனக்கு என்னாம்மா வேணும்? இந்த எளவு ‘டிரஸ்’ எனக்கு ஒடம்பையே அறுக்குது. என் வெள்ள சீல, ரவிக்கை ரெண்டும் அங்கே அந்த வூட்டுல தகரப் பொட்டில இருக்கு. அதை ரங்கனுக்கு போன் போட்டுச் சொல்லிக் கொண்டாரச் சொன்னாப் போதும்...”
“அந்த சீலதான் வேணுமா? இப்பவே ஃபோன் போடுறேன்... நான் உங்களுக்குப் புதிசா, அரை டசன் வெள்ளைச் சேலை, நல்ல மெல்லிசு ஆர்கன்டியோ, ஃபுல்வாயிலோ, செட்டா கொண்டுவரச் சொல்றேன். வயசுகாலத்துல நீங்க சவுரியமா இருக்கணும்...”
அவள் பேசிக் கொண்டே போகிறாள். அவள் உணர்வில் சேலையைத் தவிர வேறொன்றும் புரியவில்லை.
காலையில் விழிப்பு வந்து எழுந்து உட்காருகிறாள்.
“நீங்க உடம்பு நல்லாகணும். எழுந்து, உங்க சேலையை உடுத்து வெளியே போகணும். ஆயிரமாயிரம் பேர் உங்களைப் போல் உறுதியாகப் போராடுபவர்களைச் சேர்ப்பீர்கள்...’
இதுதானே டாக்டர் பெண் சொன்ன கருத்து?
ஆங்காங்கு இருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாகக் கிராமத்தில் இருந்து பெயர்ந்து, பூமிதேவிக்குச் சொறி சிறங்கு பற்றினாற் போல் குப்பை மேடுகளிலும் சாக்கடைத் தேங்கல்களிலும் விளையாடும் தலைமுறைகளை வளர்ப்பவர்கள்... மாறவேணும்.
“ஆயா, வணக்கம். எப்டீகிறீங்க?” கையில் பிளாஸ்டிக் பை முடமுடக்கிறது.