பக்கம்:உத்தரகாண்டம்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    307

செம்மல், தலைவர், இளவழுதி மறைவு... கறுப்பு எழுத்து அச்சு- நோட்டீசுகள் ஒட்டப் பட்டிருக்கின்றன.

அவன் புகழ் நாடெங்கும் அலையடிக்கும், இரங்கல் பாடும் கட்சிக் கொடிக்கூட்டம்.

அவளை மெள்ள அழைத்துச் சென்று, ஒரு இருக்கை தேடி உட்கார வைக்கிறாள் கன்னியம்மா.

யார் யாரோ போகிறார்கள். அறிமுகமில்லாதவர்கள்; இந்த நாட்டு மக்கள். இவர்களை சத்தியப்பாய் கொண்டு ஒருங்கிணைக்க முயன்றார்.

கன்னியம்மா, ஒரு காகிதத்தில் நான்கு வடைகளும், பிளாஸ்டிக் பை குடி நீருமாக வருகிறாள்.

“இக்குணூரண்டு போண்டா, மூணு பத்து ரூபாங்குறான். அதுக்கு சட்டனி கிடையாதாம். பேமானி!” என்று திட்டிக் கொண்டே அதைப் பை மீது கீழே வைக்கிறாள். ஒரு பிளாஸ்டிக் பையைப் பல்லால் கிழித்துத் தண்ணீரைத் திறக்கிறாள். “ஆயா, கையக் கழுவிக்குங்க...” கொஞ்சம் கையில் விட்டு அவள் முகத்தைத் துடைக்கிறாள்.

“யம்மா, இது குடிக்கிற தண்ணி இல்ல?”

“குடிக்கிறது கழுவுறது அல்லாத்துக்கும் இதுதா. ரயில்ல, அத்தினிகாசு டிக்கெட்டுக்குப் புடுங்கினா, கழுவத் தண்ணி இருந்திச்சா? இப்ப எங்க தண்ணி தேடிட்டுப் போக?... நாலரை மணிக்கு வண்டி இருக்காம். நாம உடனே போகணும். நா வெளியே போயி டிக்கெட் எடுத்திட்டு வர.” அவசர அவசரமாக முடித்துக் கொண்டு, அவள் கையைப் பற்றி அழைத்துச் செல்கிறாள். படி ஏறாமல் இருப்புப் பாதை கடந்து, வண்டியில் ஏற்றி விடுகிறாள். உட்கார இடம் கிடைத்து விடுகிறது. நெருக்கம்தான். சாய்ந்தாற்போல் கண்களை மூடிக் கொள்கிறாள்.

வண்டி எப்போது புறப்படுகிறதென்று தெரியவில்லை. அடிபிடிகள், கூச்சல், நெருக்கங்கள் உறைக்காத ஆசுவாசம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/309&oldid=1050430" இலிருந்து மீள்விக்கப்பட்டது