பக்கம்:உத்தரகாண்டம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308   ✲   உத்தரகாண்டம்


இருட்டி இரவாகிவிட்டது. சிதம்பரம், சீர்காழி என்று குரல்கள் கேட்கின்றன. வண்டி எங்கே நிற்கிறது, புறப்படுகிறது என்று அவள் கண்களைத் திறக்கவில்லை “முருகா... நீ நல்லது தா செய்யிவே, என்னிய எப்படிக் கொண்டு போவணும்னு, நீதா நெனக்கிற!...”

“பாவிப் பயலுவ. எழவு சினிமா, ஊரு உலகத்தைக் கெடுத்துக்குட்டிச் சுவராக்குது. ஏதோ படமாம். பத்து ரூபா குடுத்து டாலர் வாங்கி மாட்டிகிட்டு, நூறு இருநூறுன்னு டிக்கெட் வாங்கிட்டு அழியிது. கும்பிகாயுது. ஒழவு, நடவுன்னு புழைக்கத்தண்ணி இல்ல. கட்சிக்காரனுவ கொடி புடிச்சிக்கிட்டு இந்த இளசுகளை அடி வெட்டுன்னு திசை திருப்பறானுவ. நேத்து எவனோ செத்திட்டானாம். அதுக்குன்னு ஒரு பய மண்ணெண்ணை ஊத்திக்கிட்டு எரிய நிக்கிறானாம். அப்பன் ஆயி லபோலபோன்னு அடிச்சிட்டு சாவுக்குப் போவ தாலிய வச்சி துட்டுக் குடுக்கிறா.”

அவள் கண் விழித்துப் பார்க்கிறாள். மூலையில் அரைக்கை வைத்த அழுக்குப் பனியனும் வேட்டியுமாக ஒரு முதியவர் மஞ்சள் பையைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். அவர் வாயிலிருந்துதான் சொற்கள் வருகின்றன.

மீண்டும் கண்களை மூடுகிறாள்.

வண்டி கடக்கென்று நிற்கிறது. “அல்லாம் எறங்குங்க, ஏறங்குங்க!”

“இது இனிமே போவாதாம். எறங்கி, பஸ் புடிச்சிப் போகணும். ஏம்மா, எங்க போவணும்?”

“நாங்க புதுக்குடி போயி அப்பால கண்ணமங்கலம் போவணும்?”

“இது புதுக்குடில நிக்யாதா?”

“நிக்கும். ஆனா, இன்னாமோ போராட்டமாம். ரயில் பாதையில் நின்று ராத்திரியில மாறியல் செய்யிறாங்க! போகாதுன்னு கார்டு சொல்லிட்டுப் போறாரு...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/310&oldid=1050431" இலிருந்து மீள்விக்கப்பட்டது