328 ✲ உத்தரகாண்டம்
அந்தப் பய்யன் எந்த திக்கில ஓடினான்னு தெரியல...” அவள் மவுனமாக இருக்கிறாள்.
எல்லோரும் உள்ளே வருகிறார்கள். ஒரு பெஞ்சும் ஒரு பழைய கால பிரம்புபின்னிய சாய்வு நாற்காலியும், இரண்டு மர நாற்காலிகளும் இருக்கின்றன. ராமலிங்கம் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கிறார். தாயம்மா பெஞ்சில் அமர்ந்திருக்க, கன்னியம்மா, ஒட்டி நிற்கிறாள்.
அவர்கள் எல்லோரும் பெஞ்சிலும் தரையிலுமாக உட்காருகின்றனர்.
“எல்லாம் பாத்தீங்களா?”
“பார்த்தோம். மூணு அரிவாள், குத்துகம்பு... என்ன அது?” என்று அந்தப் பெண், தமிழில் பேசியவள் கேட்கிறாள்.
“இவதா, எம்பேத்தி. செங்கமலம். இதா... விக்ரம்... உங்க வீட்டுப் பேரன், ஒரே வாரிசு”
“இது சூஜி... மத்யப்பிரசேத்திலேந்து வந்திருக்கு இது, லீலா, ஒரிசா, இவன் தினு... வங்காளம், இது, மாயா... மணிபுரி... இதோ இந்த வீட்டு சிங்காரம்... உசரமா பாக்குறாரே? அவரு காலித்...”
எல்லாரும் அவள் காலைத் தொட்டு, வணங்குகிறார்கள்.
எல்லாரையும் முகத்தை வழித்து திருஷ்டிகழிக்க நெஞ்சு குழைகிறது.
“நீங்க எல்லாரும் எங்கேந்து வரீங்கய்யா?”
“காலித், தினு, லீலா, இவங்கல்லாம் ஏற்கெனவே இங்க பிராஜக்ட்ல பங்கெடுத்துக்கிட்டிருக்கிறாங்க. நீர் பராமரிப்பு, துருவாருதல், இறால் பண்ணை எதிர்ப்புன்னு இயக்கங்கள்ள சம்பந்தப்பட்டிருக்கிறாங்க. அடிப்படையில், நமக்கு ஜனநாயக உரிமை இருக்கு. எங்க தாத்தா பாட்டி காலத்