84 ✲ உத்தரகாண்டம்
அவள் குரலில் அழுகை தழுதழுத்தது... நாய் சுற்றிச் சுற்றி வந்து குலைத்தது. அவள் சேலையைப் பற்றி இழுத்தது. “ஐயா, தம்பி...?”
தோளைப்பற்றி உலுக்கினாள். எப்போதும் போன்ற ஓர் அரைக்கை பனியன்; வேட்டி தூங்குவதுபோல் இருந்தார்.
அவள் அலறிக் கொண்டே வந்தாள். அப்போதுதான் ரங்கன் வந்து கொண்டிருந்தான்.
“ரங்கா, ரங்கா... என்ன ஆச்சுன்னு தெரிலயப்பா, அவுரு அந்தத் தம்பி...”
அவன் சலனமில்லாமல் உள்ளே வந்து பார்த்து விட்டுப் போனான். இடி இறங்கின மாதிரி இருந்தது.
பத்து மணிக்குள் எல்லோரும் கூடிவிட்டார்கள். பராங்குசம் காரைப் போட்டுக் கொண்டு வந்தான். நிக்கொலசு, சாயபு, ஜானகியம்மா, கடைக்கார நாடார், இன்னும் யார் யாரோ, பெருங்கூட்டம் கூடிவிட்டது. யார்யாரோ ராணுவத்தினர் கூட வந்திருந்தனர்.
துரும்பாக அவள் அலைபாய்ந்தாள்.
மாலைக்குள் எல்லாம் அடங்கிப் போயிற்று. பஞ்சாபி நண்பர்கள், நாயை அழைத்துச் சென்றனர். அவருடைய கட்டில், அலமாரி, புத்தகங்கள் எல்லாமே கொண்டு போனார்கள். சடங்கு என்று புரோகிதர் யாருமே வரவில்லை. வண்டி வந்து உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்றது. நிக்கொலசுதான் கொள்ளி வைத்தாகச் சொன்னார். அடுத்த நாள் பெரிய பிரார்த்தனை கூட்டம் எப்போதும் போல் அவர்கள் வீட்டுக் கூடத்தில் நடந்தது. அப்போது, அவருக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்த அலமேலும்மா வந்து கதறி அழுதாள். ஒரு வண்டியில், பொங்கல், வடை, சுண்டல் எல்லாம் வந்து இறங்கியது. வீடு காலிபண்ணுமுன், ஒரு பக்கம் பழைய பேப்பர் கட்டுடன், இரண்டு சிறிய பிராந்தி பாட்டில்களோ எதுவோ