உத்தராயணம் 15
திடீரென வானத்தில் பூக்கள் மண்டிக் கிடக்கின்றன. மொட்டுக்கள், மலர்கள் , பிய்ந்த இதழ்கள், மூச்சுவிடும் விண்மீன்கள், சின்னதும் பெரிதுமாய்ச் சீனாக்கற்கண்டு கட்டிகள் வைரச்சிதறல்கள், உறைந்து போன கண்ணீர்த் துளிகள்-இதய உதிரிகள் இவற்றிலிருந்து இழுத்த ஜிகினாச்சரடுகளில் ஏதேதோ நினைவுகள், தோற்றங்கள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் கோவிலில் விதவிதமான காய்கறிகளைக் கட்டித் தொங்கவிட்டு ஒரு உற்சவமாமே! அதுமாதிரி-
-என் பையல் பருவத்தில், நான் வளர்த்த ஒரு குச்சு நாயின் சடைமறைத்த முகம்:
-இளம் வயதில் மரித்த என் தம்பி;
-ரீதி கெளளையின் ஒரு சொகுஸூ வளைவு:
-ஹரிணி கொடியாயிருந்த நாளில் அவள் கூந்தலிலிருந்து பிய்த்தெறிந்த தாழம்பூ மடல்:
-இரவு வேளை கடலோரம் அலைகள் மோதி மீள்கையில் விட்டுச் செல்லும் நுறைத் துளிகள். பொரியும் முத்துக் கொதிகள்:
-டெலிபோன் மணியோசை;
-தச்சன் இழைப்புளியிலிருந்து கூடம்பூரா சிதறும் மரச்சுருள்கள்:
-குப்பையில் மாணிக்கக் கற்கள்:
-கண்ணீரும் கம்பலையுமாக அம்மாவின் முகம்: (ஏன்?)
-கன்யாகுமரியின் மூக்குத்தி -
இன்னும் ஏதேதோ சொல்லுக்குள் அடங்கினவை, அடங்காதவை. திடீரென இதுவரை எப்படியும் தோன்றாத எண்ணம் ஒன்று அதன் பெருமிதத்தில் நானே உடல் விம்முவதாகத் தோன்றுகிறது. இந்த மொட்டைமாடியின் அடைப்பில் அடங்கிய வானவரைக்குள் அடங்கிய இத்தனை சொத்துக்களும் என்னுடையதுதானே?