பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

 ரஹீமை அந்த அமீரோடு யாஸ்மி ஒப்பிட்டுப் பார்த்தாள். ரஹீம் ரஹீமாகவே இருந்தான். அமீர் ஆகவில்லை! இருந்தாலும் ரஹீம் நல்லவன். நல்லவன் மட்டுமல்ல, செல்வக் குடியில் பிறந்தவன். அவனுக்காக ஓடி ஒடி வேலை பார்க்க எத்தனையோ அடிமைகள் இருக்கிறார்கள். அவனை யாஸ்மிக்குப் பிடித்திருந்தது. ஆனால், அவன் கூட வருகிறானே, ஒரு நண்பன் அவனைக் கண்டால் அவளுக்குப் பிடிக்கவேயில்லை. அந்தப் பையன் அவளை ஏறிட்டுப் பார்ப்பதேயிலை. எப்பொழுதும் ஊமை போலவே இருப்பான். எதுவும் பேசுவதேயில்லை. அவன் இப்ரஹீமின் பிள்ளையாம். அவன் ஒரு புத்தகப் புழு. கடுகடுவென்ற முகத்தோடு எப்பொழுது பார்த்தாலும் புத்தகங்களையே படித்துக் கொண்டிருப்பான். அவன் ரஹீமோடு வருவான். கடையில் ரஹீமும் அப்பாவும் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த இப்ரஹீமின் பையன் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டு இருப்பான். இருட்டிக் கொண்டு வருவதுகூடத் தெரியாது. நன்றாக இருண்டு புத்தகங்களை எல்லாம் மூடி மாலைத் தொழுகைக்குப் புறப்படும் வரையில் படிப்பான். யாஸ்மியை அவன் உற்றுப் பார்ப்பதேயில்லை. வீதியில் நடக்கும்பொழுது, தோள் துண்டு காற்றில் பறந்து கொண்டிருக்கும், தலைப்பாகையை ஒழுங்காகக் கட்டியிருக்கமாட்டான். வீதியின் குறுக்கே நடக்கும் போதாவது பார்த்து நடந்து வருவானா? கழுதைகளை உரசிக் கொண்டும் ஒட்டகத்தின் கழுத்துகளுக்குக் கீழே நுழைந்துகொண்டும் அவசர அவசரமாக நடப்பான். அவனும் அவன் ஆடை லட்சணமும் எதுவும் இப்ராஹீமுக்குப் பிடிப்பதில்லை. இங்கே இப்ராஹீமின் பிள்ளை ஊமைபோல் பேசாமல் இருக்கிறானே பள்ளிக் கூடத்தில் அப்படியில்லையாம். ஆசிரியர்களோடு எப்பொழுதும் தகராறாம். அவர்களைக் கேள்வி கேட்பதும் கிண்டல் செய்வதும்....! ‘உருப்படுகிறவனாகத் தோன்ற வில்லை’ என்று அப்பாவே ஒரு நாள் சொன்னார். இந்த ரஹீம் ஏன்தான் அந்தப் பையனோடு சேர்கிறானோ தெரியவில்லை!

இப்படியாக, யாஸ்மியின் எண்ணத்திலே இப்ராஹீம் மகன் வெறுப்புக் குரியவனாகவும் ரஹீம் விருப்புக்குரியவனாகவும் இருந்து வந்தார்கள். ஆனால் அவள் இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்படியான நிகழ்ச்சியொன்று நடந்தது.