பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

“இந்தப் பெண்ணின் பெறுமதி எவ்வளவோ? அவ்வளவு பணம் என்னால் கொடுக்க முடியுமோ முடியாதோ?”

“முட்டாளே! நிசாம் அல்முல்க் அவர்களுடைய வானநூல் சாஸ்திரியிடம், பணத்துக்காகவா பேரம் பேசுவார்கள், நீ வந்து கேட்டாலே போதும். நல்ல சம்பந்தம் என்று கொடுத்ததை வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொடுப்பார்கள். அது நடக்க வேண்டும். என்னுடைய இந்த வீட்டிலே நான் வந்து தங்கவேண்டும். உன்னுடனேயே நான் எப்பொழுதும் இருக்கவேண்டும். இது நடக்காவிட்டால் என்னால் உயிர்வாழ முடியாது” என்றாள் யாஸ்மி.

“அப்படியானால், இப்பொழுது முதலே இங்கேயே இருந்துவிடு”

“அது எப்படி முடியும்? திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணையடைவது திருட்டுக்குச் சமமாயிற்றே! அவ்வாறு பெண்ணைக் கடத்திவருவது பெரும் பாவமாயிற்றே! திருமணத்தின் மூலமாகத்தான் நீ என்னை உன்னுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

அந்த நிலை வெகுவிரைவில் வரவேண்டுமென்று அளவற்ற அருளாளனும் அன்பின் இருப்பிடமுமான அல்லாவின் கருணையை நாடித்தினமும் வேண்டித்தொழுது வருவேன். இதுவே என் இன்பம். இதைத்தவிர வேறு இன்பம் எதுவும் எனக்குத் தேவையில்லை!

மறுநாள் யாஸ்மி வரவில்லை பச்சைப் புல்வெளியும், கல்லறைகளின் மேல் பூத்திருந்த காட்டுமலர்ச் செடிகளும் காலைக் கதிரவன் ஒளியில் அழகுடன் விளங்கின. உள்ளத்தில் அமைதியில்லாமல், கையில் கவிதைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை எடுத்துப்படிக்க முயற்சித்தான்.

பச்சைப் புல்வெளியிலே பூத்தமலர்ச் செடிகளைப்போல, புத்தகத்திலே நான்கு நான்கு வரிகளாகக் காட்சி தந்த அந்தக் கவிதைகள் தோன்றின. ஒரு வெள்ளைத் தாளிலே, அவன் உள்ளத்திலேயிருந்து புறப்பட்ட கீழ்க்கண்ட வரிகளை அவன் எழுதினான்.