பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

கொடுத்தாயே! என்ன பிடித்து வைத்துக் கொண்டு கொடுத்தாய், முட்டாள்” என்றான்.

“ டேய் திருட்டுப்பயலே, உள்ளேவராதே ! பிச்சைக்காரப்பயல் நீ அவனை அனாதையென்கிறாயோ! அவன் யார் தெரியுமா? நிசாம் அல்முல்க் அவர்களின் அபிமானத்தைப் பெற்றவன்!” என்றான்.

இதைக்கேட்ட பிச்சைக்காரனுக்கு, யாரோ தன் சதையை வெட்டியெடுப்பது போல் வேதனையாக இருந்தது. இந்த விஷயம் மட்டும் முதலிலேயே தெரிந்திருந்தால், இந்த இரகசியத்தை அந்தப் பெண் வீட்டிலே சொல்லாமலேயே, சொல்லப் போவதாகப் பணம் கறந்திருக்கலாமே! முதலில் தெரியாமல் போய்விட்டதே!” என்று கவலையில் மூழ்கினான்.

உமாருக்கு ஆத்திரம் ஆத்திரமாகவந்தது. எல்லா விஷயங்களையும் அரைகுறையாகவே பார்த்தான் அரைகுறையாகவே தெரிந்து கொண்டான். எப்படியோ, தெருவீதிக்கு வந்து, நீருற்றின் அருகிலேயுள்ள யாஸ்மியின் வீட்டுக்குச்சென்று, அவளுடைய சிற்றப்பனைப் பார்க்க வேண்டுமென்று கூறினான். ஒரு மாதிரியான ஆள் உள்ளேயிருந்து வந்தான். எதற்காக வந்தான் என்று தெரிந்து கொண்டதும் எரிந்து விழுந்தான். இரைந்து கத்தினான். “திரைக்குப் பின்னால் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிக் கேட்கிறாயே! உனக்குப் பித்துப்பிடித்து விட்டதா? முட்டாளே! பெயர் சொல்லி எங்கள்வீட்டுப் பெண்ணை நீ எப்படி அழைக்கலாம்? அவர்கள் என்ன ஆடுமாடுகளா?” என்று பலப்பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே பெரும் சத்தமிட்டான். யாஸ்மியின் தகப்பனும், புத்தகக் குவியலின் மத்தியிலிருந்து எழுந்து வெளியே வந்தான். கண் தெரியாமல் முகம் வெளுத்து, முதுமையடைந்து காணப்பட்ட அவன் எதுவும் பேசவில்லை.

“அந்த வெட்கங்கெட்ட திருட்டுப்பயலை எச்சரித்து அனுப்பு! திருட்டுப்பயல்! இங்கேயே ஓடிவந்து விட்டானே! அவனைத் தூண்களில் கட்டியடி! கால் மணிக்கட்டை பெயர்த்தெடு” என்று உள்ளேயிருந்து ஒரு பெண்குரல் ஆணையிட்டது.