பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

135

உட்கார்ந்திருந்த அந்த மனிதன், உமாரின் வருகைக்காகக் காத்திருந்தவன் போல் எழுந்து நின்றான்.

“ஒருவன் போகிறான்! மற்றொருவன் வருகிறான்!” என்று அந்த மனிதன் கூறினான். உமாரைக் காட்டிலும் குட்டையாகவும், அடர்ந்த புருவமும், சுருண்ட மழித்த தாடியும் உடையவனாகவும் ளங்கிய அந்த மனிதன் அரபிக் காரர்களைப்போல் அவனுடைய அகன்ற தோள்களிலே ஒரு சால்வை போர்த்தியிருந்தான். ஆனால் அவனைப் பார்த்தால் ஓர் அராபியனைப் போல் தோன்றவில்லை.

தரையை நோக்கிக் குனிந்த அவன் கீழே கிடந்த அந்த ஆட்டக்காரனின் பிணத்தின் மேல் உமாரின் பார்வை படும்படி செய்தான். மார்பின் நடுவே பாய்ந்திருந்த ஒரு கத்தியின் பிடி மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. “அவனுடைய வேதனையைப் பொறுக்க முடியாமல் நான்தான் குத்தித் தீர்த்தேன்” என்றான் அந்த மனிதன்.

மேலே ஒரு கழுகு வட்டமிட்டுக் கொண்டிருந்தது. உமார் அதைக் கவனித்தான். “அது என்னுடைய கூட்டாளி உயர்ந்த இடங்களிலே அது என்னோடு வந்து சேர்ந்து கொள்ளும்” என்றான் அந்தக் குட்டை மனிதன்.

“நீ யார்?’ என்று கேட்டான் உமார்.

“மலைப்பிரதேசத்தைச் சேர்ந்தவன். ரே நகரவாசி” என்று பதில் கூறினான். அப்படிக் கூறும்பொழுது அவனுடைய ஒளி மிகுந்த கண்களிலே புது மின்னல் தோன்றியதுபோல் இருந்தது.

ரே என்பது பாரசீகத்தின் பனிமலைச் சிகரங்களின் ஊடே உள்ள மலைப்பிரதேசத்திலே யிருந்த ஒரு நகரம். இந்த மனிதன் ஒரு பாரசீகத்தவனாக இருக்கலாம். எனினும் அவனுடைய மொழி உச்சரிப்பு எகிப்தியர்களுடையதைப் போல் தோன்றியது. பல மொழிகளையும் இயல்பாகப் பேசக்கூடிய பயிற்சியுடையவனென்பதும் அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ள முடிந்தது.

“கூடார மடிப்பவனாயிருந்து, அரசரின் வானநூற்கலைஞனாகி இருப்பவன் நீ, அல்லவா? இப்பொழுது, இஸ்டாரின் கோயிலிலே நின்றுகொண்டு பலரும் பைத்தியம்