பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139


அவன் கூறிய சோதிடம் உண்மை என்பதை மாலிக்ஷா நன்றாக அறிவார். இருப்பினும் உமார் படையெடுப்பை மறுத்திருந்தால் தன்னுடைய வான நூற் கலைஞரின் மேல் மிகமிக மதிப்பு வைத்திருந்த சுல்தான், நிச்சயமாகத் தன்னுடைய போர்த் திட்டத்தை மாற்றிக் கொண்டிருப்பார். அவ்வளவு தூரம் அவருக்கு உமார் மீது நம்பிக்கை யிருந்தது.

சுல்தானின் படைகள் அப்பொழுது அலெப்போ நகரின் செம்மண் வெளிப் பிரதேசத்தில் முகாமிட்டிருந்தன. ஜெருசெலத்தைக் கைப்பற்றுவதற்காகச் செல்லவிருந்த தளபதி அமீர் அஜீஸின் படைகளோடு தானும் செல்வதெனத் தீர்மானித்தான் உமார். அவன் மேற்குக் கடலைப் பார்க்க வேண்டுமென்று விரும்புவதாகவும் அதற்கு முன் எந்தக் கடற்கரையையும் அவன் பார்த்ததேயில்லையென்றும், மேலும் ஜெரூசலத்தில் உள்ள மசூதிக்கு யாத்திரிகனாகப் போகவேண்டுமென்றும் விரும்புவதாகவும் சுல்தான் மாலிக்ஷாவிடம் அவன் தெரிவித்தான். உண்மையில் அவன் நோக்கம் அவையல்ல. வழியில் கடந்து வந்த நகரங்கள் முழுவதும், அப்பொழுது தங்கியிருந்த அலெப்போ நகர் முழுவதும், சந்தை கூடுமிடம் எங்கும் அவன் விசாரித்துப் பார்த்தும் யாஸ்மியைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்க வில்லை. மீஷித் நகரிலிருந்து ஓர் இளம் மனைவியுடன் வந்த துணி வியாபாரியைப் பார்த்ததாக அடையாளம் சொல்லக் கூடியவர் யாரையும் அவன் காணவில்லை. ஆகவே மேலும், ஜெருசலம் வரை சென்று அவளைத் தேட வேண்டுமென்பதே அவனுடைய நோக்கம்.

அலெப்போவிலிருந்து, தென்முகமாகச் செல்லும் பாதையிலே சென்றால், டமாஸ்கஸ் பட்டணத்திற்கும், பாலைவனத்தைக் கடந்தால் எகிப்துக்கும் போகலாம். இந்தத் தென் திசைப் பாதையில் சென்றால், யாஸ்மியைப் பற்றிச் செய்தி எதுவும் அறியலாம். இதுவே அவனுடைய திட்டம், டுன்டுஷைப் போல் செய்திகளைச் சேகரிக்கும் ஆற்றல் தனக்கில்லையே என்று வருந்தினான்.

“உன்னுடைய புனித யாத்திரை தொடங்கட்டும்! நீ அங்கு செல்லும் பொழுது, துரத்தில் இருக்கும் அந்த மசூதியின்