பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

145

புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஹாஸான் அவற்றை எளிதாக வாசித்தான்.

“ஆண்டவனைத் தவிர வேறு கடவுள் எதுவும் கிடையாது. அவருக்குப் பங்காளியும் கிடையாது. மேரியின் திருமகனான இயேசுநாதர், கடவுளின் செய்திகளை நமக்குத் தெரிவிக்கும் தூதுவரேயாவார். கடவுளையும் அவருடைய தூதுவர்களையும் நம்புங்கள். மூன்று கடவுள் இருப்பதாக மொழியாதீர்கள். அதுவே உங்களுக்கு நல்லதாகும்”

ஹஸான் உமாரின் கையைப் பிடித்துக் கொண்டு, “இந்தத் திருவாக்கியங்கள் எழுதப்பெற்ற பின்னர் இதைக் கண்டவர்கள் சிலரே! இதைப் படித்தவர்கள் மிகமிகச்சிலரே! ஆனால் புரிந்து கொண்டவர் யார் இருக்கிறார்கள்? ஆனால், நீ நிச்சயமாகப் புரிந்து கொள்வாய் என்றே எண்ணுகிறேன்” என்றான்.

சுற்றிலும் கூடியிருந்த கூட்டத்தின் நெருக்கடியைப் பொறுக்க முடியாதவனைப்போல, உமாரை அழைத்துக் கொண்டு வெளியே வந்த ஹாஸான், அந்த நகரின் சந்து பொந்தெல்லாம் அவனை அழைத்துக் கொண்டு சென்று, மற்றவர்கள் கவனிக்கத் தவறிய பல விஷயங்களைக் காண்பித்தான். கூடவந்த அந்த மனிதன் இவற்றையெல்லாம் ஊன்றிக் கவனிக்கவில்லை. ஏதோ சொந்த யோசனைகளிலே மூழ்கியவனாக ஒன்றும் பேசாமல் இவர்களைத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான்.

“அதோ அந்த இடத்தைப் பார். அங்கேயிருக்கிறதே வளைவு அருகிலே ஜன்னல், அங்கேயிருந்து கொண்டுதான் பொண்டியால் பைலேட் என்ற ரோமானிய அரசப் பிரதிநிதி யூதமதக் குருக்களுடன் பேசிக் கொண்டிருந்தான். அதே கிறிஸ்துவரான அரசப் பிரதிநிதி சிலுவையில் வைத்துக் கொல்லப்படுவதற்காகப் பட்டாளத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டான். இப்பொழுது அந்தச் சிலுவையைத் தாங்கியிருக்கும் பாறை கிறிஸ்துவர்களால் மறக்கப்பட்ட இடமாகி விட்டது”

தெருக்களிலே இடிந்து கிடந்த குவியல்களின் மேல் உட்கார்ந்து, வம்பளந்து சிரித்துக் கொண்டிருந்த துருக்கியப் போர் வீரர்களைக் கடந்து உமாரைத் தள்ளிக் கொண்டு போன ஹாஸான் மேலும் பேசினான்.
உ.க. 10