பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148


ஹாஸானின் கூட வந்த அந்த மனிதன், மிகவும் பருமனாயிருந்தபடியால் மெதுவாகக் காலடியெடுத்து வைத்து ஆடி அசைந்து நடந்து வந்தான். அவனுடயை கண்கள் அலை பாய்ந்து, களைத்துப்போய் இருந்தாலும், கூரிய தன்மை மாறாமல் இருந்தது. அவன் அதிகமாகப் பேசாவிட்டாலும், பேசும் சில சில சொற்களும் குத்தலாக இருந்தன. அவனுடைய பேச்சைக் கொண்டு, அவனைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ள இயலாமல் இருந்தது. அவன் பெயர் அக்ரோனோஸ் என்றும், எல்லா வியாபாரிகளுக்கும் பாட்டன் போன்றவன் என்றும் அவனைப் பற்றி ஹாஸான் கூறினான்.

அந்த அக்ரோனாஸ், உமாரை நோக்கி, “இந்தப் போர் வீரர்களைப் பார்த்தால் உன்னுடைய வேலைக்காரர்கள் போல் தோன்றுகிறதே!” என்று கேட்டான்.

“சந்தேகம் என்ன? போர் வீரர்கள் சுல்தானின் ஆணைக்குக் கட்டுபட்டவர்கள். சுல்தானின் ஆணையை உருவாக்குபவர் ஆசிரியர் உமார் அவர்கள்தானே! உமார், ஆஸ்தானத்துச் சோதிடர் மட்டுமல்ல. தீர்க்க தரிசியும் கூட! இன்னும் குறிப்பாகச் சொன்னால் இளஞ் சுல்தான் அவர்களின் தீர்க்கதரிசி!” என்று ஹாஸான் விளங்கக் கூறினான்.

அக்ரோனோஸ், தன் உணர்ச்சிகள் எதையும் வெளிக்குக் காட்டாமல், உமாரைத் தன் பார்வையால் அளவிடுவது போல் நோக்கினான். அப்பொழுது அவர்கள் ஆலிவ் மரக்காடுகள் அடர்ந்த ஒரு பகுதியைக் கடந்து ஒரு சரிவின் மேல் ஏறிக் கொண்டிருந்தார்கள். அந்த மரங்களுக்குப் பின்னால் ஒரு சிலுவையில், இரண்டு கைகளையும் விரித்தபடி ஒரு பிணம் தொங்கிக் கொண்டிருந்தது. கரிய மேலங்கியணிந்த அந்த உருவம் ஒரு துறவியினுடையது. வழித்துவிடப்பட்டிருந்த அந்தப் பிணத்தின் தலை, சாம்பல் நிறமுடைய அந்தக் கற்களின் இடையிலே, ஒரு வெள்ளைக் கல் போலத் தெரிந்தது. “இது கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலம். நாம் எறிக் கொண்டிருக்கும் இந்த இடத்தை ஆலிவ் மூடி ... என்று அழைக்கிறார்கள் என்று ஹாஸான் கூறினான்.

இறங்கிக் கொண்டிருக்கும் மாலைக் கதிரவனின் ஒளிக்கதிர்கள் அந்தக் குன்றின் மேல் சாய்ந்து கொண்டிருந்தன.