பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14


2. காரிருளில் போர் அழைப்பு

உமாருக்கு அன்று மாலைப் பொழுது, மறக்க முடியாததாகும். அவசர அவசரமாக, ஊற்றுக் கேணிக்குச் சென்று கைகால் கழுவிக் கொண்டு, மாலையுணவை முடித்துக் கொண்டு கூடுதலாக ஒரு விளக்கு வாங்கிப் பற்றவைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றான். அவனுடைய அறை, ஒரு வீட்டு உச்சியில், களிமண்ணால் கட்டப் பெற்றிருந்தது. அது, வெங்காயமும் புல்லும் காயவைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் இடமாகும். அதற்கு வாடகை சில செப்புக் காசுகள்தான். அத்துடன் நட்சத்திரங்களை அங்கிருந்து நன்றாகப் பார்க்க முடியும். இந்த இரண்டையும் எண்ணித்தான் அந்த அறையை வாடகைக்குப் பிடித்திருந்தான் உமார். இரவிலே குளிர்ந்த காற்று வீசும் பொழுது வெங்காயத் தாள்களும், புல் கட்டுகளும் உயிர் வந்தது போல சலசலக்கத் தொடங்கும். படுக்கையில் படுத்தபடியே, கூரைகளுக்கு மேல் உள்ள வானத்தையும், சுல்தானுடைய மேன்மாடச் சிகரத்தையும் உமார் பார்க்க முடியும்.

இன்று காற்றில்லை. அது அவனுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது. இரண்டு விளக்குகளையும் ஏற்றிச் சுவரின் இரு பக்கத்துப் படிகளிலும் மாட்டி வைத்து விட்டுக் கோணகணிதப் புத்தகத்தை எடுத்துத் தன் மடியில் வழவழப்பான பலகையின் மேல் வைத்துக் கொண்டு பக்கங்களைப் புரட்டலானான். பள்ளிக்கூடத்தில் கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்ப படித்ததையே படிப்பதைக் காட்டிலும், இது எவ்வளவோ உயர்ந்த படிப்பாக இருந்தது.

கணிதத்தைப் படிக்கப் படிக்க உமாரின் ஆர்வம் அதிகமாயிற்று. பேனாவும், மையும், தாளும் அவன் கைகளில் ஏறின. அளவுகோலும், வட்டமாக்கியும் ஒரு கோணம் வரைந்தான். அதைப் பல பகுதிகளாகப் பிரித்தான். எண்களும் கோடுகளும் அவன் கைவிரல்களில் நடனமாடின. அவனுடைய மனம் கணக்கில் சுழன்றது. அவன் வேலை செய்த சுவையில், அங்கிருந்த அவனுடைய அறை விளக்குகள், புத்தகம் அத்தனையும் மறைந்து விட்டன.