பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

ஒரு நிமிடம் உமாரின் அமைதி கலைந்தது. ஒரு பழக்கமான குரல் எழுந்தது. இரவு நேரத் தொழுகைக்காக அழைக்கும் குரல் அது. அவன் தொழுகை நடத்த வேண்டும். இந்தப் புத்தகம் மதவிரோதியொருவன் எழுதுயது. இப்படியொரு எண்ணம் அவன் மனத்திலே ஊசலாடியது. எரியும் விளக்குகளைப் பார்த்தான். எதுவும் புரியாமல் ஒரு வினாடி இருந்தான். மறுபடியும் கணக்கு வேலையில் ஆழ்ந்து விட்டான்.

நள்ளிரவுக்குக் கொஞ்சம் நேரம் இருக்கையில் மறுபடியும் அவன் அமைதி கலைந்தது. வீதியில் தடதடவென்று நடமாடும் ஓசை கேட்டது. வெளிச்சங்கள் அங்குமிங்குமாகத் தோன்றின. வீட்டின் உச்சியிலே ஓரத்திலே நின்றபடி கீழே வீதியைக் கவனித்தான்.

கருத்த, தலைப்பாகையணிந்த ஒரு பெரிய உருவத்தைச் சுற்றி ஒரு கூட்டமே திரண்டிருந்தது.

ஒரு இஸ்லாமிய செய்தியறிவிப்போன், அங்கே நின்று கூட்டத்தினரிடம் கூறிக் கொண்டிருந்தான்.

மத நம்பிக்கை உள்ளவர்களே! அமைதியும், இன்பமும் அனுபவிக்க நீங்கள் விரைவிலே, எச்சரிக்கைக்காரர் ஒருவரால் அழைக்கப்படுவீர்கள். நம்பிக்கையில்லாத, மதவிரோதிகளுக்கெதிராக வாள்பிடிக்கும் நாள் வந்ததும் முரசுகள் அதிரும்! உடனே, உங்கள் அமைதியைக் கலைத்துக்கொண்டு மதவிரோதிகளை, வெட்டி வீழ்த்துவதற்கான வீர வாள் பிடிக்க நீங்கள் போர்க்களத்திலே, குதிக்க வேண்டும். காற்று மணலை, அடித்துக் கொண்டு போவது போல, உங்கள் வீரம் எதிர்ப்பை வீழ்த்த வேண்டும். அழைப்பு வரும்! காத்திருங்கள்.

செய்தியறிவிப்போனுடைய குரல் இருட்டைத் துளைத்துக் கொண்டு எழுந்தது. அங்கே கூடியிருந்தவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டு பிரிந்து சென்றார்கள். அவனுடைய பேச்சுத் திறமையை வியந்து கொண்டிருந்த உமாரின் எண்ணத்திலே, இன்னொரு கேள்வி உதயமாகியது. இந்த சுல்தான் எப்பொழுது பார்த்தாலும், “போர் போர்! என்று திரிகிறானே” என்பதுதான் அந்தக் கேள்வி.

செய்தியறிவிப்போனும், “மத நம்பிக்கையுள்ளவர்களே!” என்ற அழைப்பும் மறைந்த பிறகு, உமார் நட்சத்திரக்