பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168


“பயப்படாதே! நாம் இருவருமே, நிசாப்பூருக்குச் சென்று விண்மீன் வீட்டிலே போய் இருப்போம். நான், சுல்தானிடம் அனுமதி வாங்கிக் கொண்டு வருகிறேன்.”

“தங்களால் அது முடியாதா என்ன? தங்களுக்குள்ள சக்தியை நான் மறந்து விட்டேனே. ஆமாம்! எனக்காக அங்காடியிலே எத்தனை எத்தனை பொருள் வாங்கி விட்டீர்கள்! அப்படியானால் இனிமேல் நான் பிச்சைக்காரியில்லை; அல்லவா?”

“நீ என்னுடைய உயிர். மூன்று வருடங்களாக என் ஆவி நோய்ப் பட்டிருந்தது. இப்பொழுதுதான் என் நோய் தீர்ந்தது.

“நினைத்துப் பார்த்தாலே நம் வாழ்க்கை பெரும் அதிசயமாக இருக்கிறது! இல்லையா? எத்தனையோ தடவை நான் இதை எண்ணியெண்ணி ஆச்சரியப்பட்டிருக்கிறேன். முதலில் புத்தகக் கடை வீதியில் தங்களைக் கண்ட பொழுதே காதல் கொண்டு விட்டேன்.

பிறகு, தங்களைத் தவிர வேறு எதையும் பொருட்படுத்தாத மனவுறுதி பெற்றேன். தங்கள் அருகில் இருப்பதே பேரின்பம் என்று நினைத்தேன். ஏதோ மாயவுலகில் இருப்பது போல் மகிழ்ந்தேன். தங்களைப் பிரிந்திருந்தபொழுது என் உடலின் ஒவ்வோர் அங்கமும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது.”

“இப்பொழுது எல்லாம் போய் விட்டது. அப்படித்தானே?” என்று முடித்தான் உமார்.

“ஆம்! துன்பம் எல்லாம் போய் விட்டது. ஆனால், உடல் வலி போகவில்லையே!”

“என்ன,” என்று திடுக்கிட்டபடி உமார் தலையைத் தூக்கினான். கிழக்கில், இருட்டின் நிறம் மாறிக்கொண்டிருந்தது. “கண்ணே நீ என்ன சொன்னாய்! பார், இரவு முடிந்து பகல் தோன்றுகிறது.

இரவு முழுவதும் உறங்காமல் இருந்து விட்டோமே, வருந்தாதே! இது நமக்கு விடிவுகாலம். இன்றைய விடிவு போல் என்றைய விடிவும் இருக்கப் போவதில்லை.