பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170


“இல்லை, அங்கஹlனன்! வேதனையை அனுபவித்திருந்த என்னைப் போன்றவர்களுக்குத்தான் ஒரு பெண்ணின் உணர்ச்சிகள் தெரியும்!” என்று சொன்னான் ஜபாரக்.

பிற்பகலில், உமாரை வழியனுப்புவதற்காக பெரிய அமீர்கள் வந்து சேர்ந்தார்கள். குளிர்ச்சியான மாலை நேரத்திலே ஜபாரக் தன் கழுதையின்மேல் ஏறி வழிகாட்டிக் கொண்டு முன் செல்ல உமாரின் பயணம் தொடங்கியது.

அன்று இரவு யாஸ்மிக்குக் குளிர் பிடித்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து காய்ச்சல் வந்தது. அவள் எந்தவிதமான உணவையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை. ஆவலோடு உமார் அருகில் வந்தபொழுது அவள் புன்சிரிப்புடன் இருந்தாள்.

“நான் மிக அதிகமான மகிழ்ச்சியை அடைந்துவிட்டேன்! இனி அது நிச்சயமாகப் போய்விடும்” என்றாள்.

இரண்டாவது நாள் இரவு. அவர்கள் எபிரேட்ஸ் ஆற்றங்கரையிலே தங்கள் கூடாரத்தை அமைத்தார்கள். அடுத்த நாள் காலையில் பிரயாணிகளுக்காக விடப்படும் மிதப்புத் தோணிகளிலே ஆற்றைக் கடந்து செல்லவேண்டும். யாஸ்மி கூடாரத்திற்குள்ளே, ஏழெட்டுப் போர்வைகளால் மூடப்பட்டுக் கிடந்தாள். அவளுடைய கன்னங்களில் மகிழ்ச்சியொளி பாய்ந்து விளங்கியது. உமார் கூடாரத்திற்குள்ளே நடையிட்டுக் கொண்டிருந்தாள். அவள் சென்ற திசையெல்லாம் அவள் கண்களும் சென்றன. ஆனால், கழுத்தை மட்டும் அவளால் திருப்ப முடியவில்லை.

“நான் பாக்கியமில்லாத மனைவி, என் கணவனுக்குத் தொண்டு செய்ய வேண்டியதிருக்க, எனக்குத் தாங்கள் பணிவிடை செய்யும்படியான நிலையில் இருக்கிறேன். என் திருமணத்திற்காக வாங்கிய விலையுயர்ந்த சில சாமான்களைப் பார்க்கலாமா?” என்று கேட்டாள் பிரமையோடு.

அவளைச் சந்தோஷப்படுத்துவதக்ாக, பூவேலை செய்யப் பெற்ற பொன்னாடைகளையும், முத்துப் பதித்த மேலாடைகளையும் எடுத்துக் காட்டினான். தன்னை மறந்தவளாக அவள் அவற்றை விரல்களால் தடவித் தடவிப் பார்த்தாள். ஒற்றை நீலமணிக்கல் பதித்த வெள்ளித் தலைமுடியொன்றை யெடுத்துக் காண்பித்தான்.