பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

அளித்தார்.

சுல்தான் மாலிக்ஷா, அதை ஆவலுடன் வாங்கிப் பார்த்தார். பஞ்சாங்கம், அவருடைய புரியும் தன்மைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தாலும், அதைச் சுற்றிக் கொண்டு வந்த பட்டுத் துணியில் பின்னப்பட்டிருந்த பறக்கும் பாம்பின் அழகிய உருவம் அவரைப் பெரிதும் கவர்ந்தது. பறக்கும் பாம்பு, அவருடைய பரம்பரைச் சின்னமாகும். மேலும், விண்ணின் குறிகளை விளக்கும் ஆற்றல் படைத்த உமார் கயாம் தயாரித்த இந்தப் பஞ்சாங்கம், அவருடைய தொடர்ந்த ஆட்சியை அதிர்ஷ்டமுடைய தாக்கும் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. தன் ஆட்சியில் ஒரு புதிய பஞ்சாங்க முறை ஏற்படுத்துவது அவருக்குப் பெருமையாகவும் இருந்தது.

“விண்மீண் வீட்டிலே ஆராய்ச்சி செய்த கல்வி வல்ல மேதைகளுக்குச் சிறப்புப் பட்டங்களும், பொற்கிழிகளும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். என்னுடைய அரசவை வான நூல் அறிஞருக்குக் குன்றின் மேல் உள்ள காசர் குச்சிக் என்ற சிறிய அரண்மனையை வெகுமதியாகக் கொடுங்கள்” என்று சுல்தான் ஆணையிட்டார்.

அவருடைய பெருங் கொடையளிப்புக்கு வியந்து, அதை நிறைவேற்றுவதற்கு அடையாளமாகத் தலை குனிந்து நிசாம், சுல்தான் மாலிக்ஷா காதில் விழும்படியான குரலில் பணிவுடன், “வரும் இளவேனிற் காலத்திலே, கதிரவன் பூமத்திய ரேகைக் கோட்டிலே செல்லும் சரியான நாள் வருகிறது. அன்று மாலையுடன், பழைய பஞ்சாங்க வழக்கு நிறுத்தப் பட்டு, புதிய சகாப்தத்தின் ஆரம்ப விழா நடத்தப் படுவதற்கும், புதிய சகாப்தத்திற்குத் தங்கள் பெயரால், “ஜல்லாலியன் சகாப்தம்” என்ற பெயர் வைப்பதற்கும், தங்கள் பேராணைக்குக் காத்திருக்கிறேன்” என்று நிசாம் கூறினார். சுல்தானும், அதற்குச் சரியென்று கூறினார்.

அந்த இளவேனிற் காலத்தில், சூரியன் பூமத்தியரேகைக் கோட்டில் பவனி வரும் அந்த நாளில், இரவும் பகலும் சரிசமமாக இருக்கும் அந்த நாள் மாலையில், தன்னுடைய பிரபுக்கள் புடைசூழ, அரண்மனைக் கோட்டைக் கோபுரத்தின் உச்சியிலே, சுல்தான் மாலிக்ஷா ஏறி நின்றார்.