பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266


இன்னொரு வெள்ளை உருவம் சந்தியின் குறுக்கே ஓடியது. தடுமாறிய அந்த உருவத்தை விரட்டிச் சென்றவர்கள் சூழ்ந்து, கொண்டார்கள். வாட்கள் அந்த உருவத்தின் மேல் பாய்ந்தன. அதன் வெள்ளை யாடைகள் செந்நிறமாக மாறின.

கொல்லுவதற்காகவே திடுமென்று கூடிய அந்தக் கூட்டத்தின் மத்தியிலே தாடியுடன் நின்ற முல்லா ஒருவர் தன் கைகளை யுயர்த்தி “மதமறுப்புக் காரர்கள் ஒழிக!” என்று கூறினார். அவர் கூறுவதைக் கேட்டுவிட்டு ஒரு பத்து வயதுச் சிறுவன் அழத் தொடங்கினான். அந்த இஸ்லாமிய மதகுரு அந்தச் சிறுவன் இருந்த பக்கம் திரும்பி, “மதநம்பிக்கையுள்ளவர்களே, ஏழாவது கொள்கைக் காரர்களின் வாரிசு ஒன்று இதோ இருக்கிறது” என்றார்.

பயந்து கத்திக் கொண்டே, அந்தப் பையன் ஓடினான். உமாரைக் கண்டவுடன், அங்கே பாய்ந்து வந்து, அவனுடைய அங்கியைப் பிடித்துக் கொண்டு, “குவாஜா அவர்களே! இளவரசே! அவர்கள் என்னைத் துன்புறுத்தாமல் காப்பாற்றுங்கள்!” என்றான்.

கையில் கத்தியுடன் பாய்ந்து வந்த அரைத்தாடி வளர்ந்த இளைஞன் ஒருவன் அழுது கொண்டிருக்கும் அந்தப் பையனைப் பிடித்தான். உமார் அவனை அப்புறத்திலே தள்ளிவிட்டு, “என்ன இது? ரே நகரத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளையா வேட்டையாடுகிறீர்கள்! எட்டி நில்!” என்று உமார் அதட்டினான்.

கத்தியுடன் நின்ற அந்த இளைஞனின் பக்கத்திலே கோபத்தால் முகத்தில் சிவப்பேறிய அந்த முல்லா தோன்றினார். “குவாஜா உமார் இபின் இப்ராஹீம் அவர்களே! அமைச்சர் நிசாம் அல்முல்க் அவர்களின் ஆணைப்படிதான், மத விரோதிகளான இந்த ஏழாவது கொள்கைக் காரர்கள் மரண மடைகிறார்கள். வாளாயுதம் என்னும் நீதி, மதமறுப்பு என்னும் நூலைத் துண்டிக்கிறது. இதிலே நீங்கள் தலையிடாதீர்கள்!” இவ்வாறு அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த இளைஞன் தன் கத்தியால் பயந்து கொண்டிருந்த அந்தப் பையனைத் தாக்கினான்.

அதே சமயத்தில், உமாரின் பின்னாலிருந்து அவன் இடுப்பைச் சுற்றிக் கொண்ட இரண்டு வலியகைகள் அவனைப்