பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

281

கொண்டான்! தான் இருந்த இடத்திலிருந்து முன்னிரவு அவர்கள் வந்த பாதை எதுவென்று பார்த்துக் கண்டுகொள்ள முடியவில்லை.

ஏனெனில், கீழேயுள்ள வெள்ளிமயமான ஆற்றின் படுகை வரையிலே அந்தப் பாதை ஒரே செங்குத்தாக இருந்தது. அதற்கப்பால், பாறைகள் ஏறி ஏறி இறங்கி வரிசைபடிக்கு உள்ள கூரைக் கோபுரங்கள் போலக் காட்சியளித்தன.

அந்தக் கழுகுக்கூட்டில் அவர்கள், இயற்கையான மலைப் பாறைகளை அடுக்கிக் கட்டப்பட்டிருந்த படியால், மற்றொரு பள்ளத்தாக்கின் பக்கத்திலிருந்து அதைப் பார்த்தால், ஏதோ மலையின் உச்சி என்று தோன்றுமே தவிர, அங்கே ஒரு கோட்டை இருக்கிறதென்று தெரியாது. அதற்கு மேலே வட்டமிட்டுப் பறக்கும் கழுகுகளைத் தவிர, வேறு யாருக்கும், அங்கு ஒரு கோட்டை இருக்கிறது என்ற விஷயம் தெரியப் போவதில்லை. அந்தக் கோட்டையும் அதன் சுற்றுப்புறச் சுவர்களும், மலைமுடியில் உள்ள இடம் முழுவதும் பரந்து இருக்க வில்லை என்பதையும் அவன் தெரிந்து கொண்டான்.

கோட்டையின் குறுக்காக நடுமத்தியில் ஒரு சுவர் இருந்தது. அதற்கப்பால், மரங்களின் உச்சிப் பகுதிகள் தலைநீட்டிக் கொண்டிருந்தன. “அதோ அங்கே ஒரு தோட்டம் இருக்கிறது. தாங்கள் அதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று ரக்கின் உட்டின் கூறினான்.

சில சமயம் சுவர்களின் மேல் காவல் வீரர்கள் இருப்பதையும் உமார் கவனித்தான். ரே நகரத்து நாற்சந்தியில் கொல்லப்பட்ட ஏழாவது கொள்கைக்காரர்களைப் போலவே அவர்களும், வெள்ளை மேல் சட்டையும் சிவப்புக் கால்சராயும் சிவப்பு மிதியடிகளும் அணிந்திருந்தார்கள்.

அங்கு ஏராளமாக வேலைக்காரர்கள் இருந்தார்கள். அவர்களிற் பெரும்பாலோர், எகிப்தியர்களும், கருப்பர்களுமே! சீன உடையில் இருந்த ரக்கின் உட்டின் போன்ற சிலரைத் தவிர அங்கு அதிகார அந்தஸ்துள்ள மனிதர்களையோ, பெண்களையோ ஒருவரைக் கூடக் காணோம். அவர்கள் ஒருவரோடொருவர் பேசும் பொழுது, வாய்க்கு வந்த எதாவது ஒரு மொழியில் பேசினார்களோ, என்று தோன்றியது.