பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

287

முணுமுணுத்தார்கள். ஓர் இடத்திலே அவன் உமாரை உட்காரவைத்தான்.

எங்கும் இருள் நிறைந்திருந்தது. உமாருக்கு முன்னும் பின்னும் பலர் உட்கார்ந்திருந்தார்கள். எதிரில் தெரிந்த தலைகளுக்கும் அப்பால் ஓர் இடத்திலே நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. நெருப்பு அல்ல. உற்று நோக்கியதில். கீழே உள்ள பாறை வெடிப்புகளின் இடையிலிருந்து நெருப்பு நாக்குகள் மட்டும் வெளியிலே தோன்றியது. அந்த நாக்குகள் அசல் நெருப்புப் போல சிவப்பாக இல்லை, ஒரு வித நீல நிறத்துடன் விளங்கின. அந்த நெருப்பு நாக்குகளின் ஆட்டத்திற்குத் தகுந்தாற்போல் ஓர் இசை யெழுந்தது. அந்த இசை, முதலில் குழலிசை போலத் தோன்றியது. பிறகு அதற்கிடையிடையே தாளத்தின் சத்தமும், குகையின் மேல் பகுதிகளிலே ஆடிக்கொண்டிருந்த மணிகளின் எதிரொலியும் கூட அந்த இசையுடன் கலந்து வருவது தெரிந்தது.

முன் புறத்தில் இருந்தவர்கள், தூரத்திலிருந்து வந்த இசையோசைக்குத் தகுந்தாற்போல் தம் தலைகளை அப்படியும் இப்படியும் ஆட்டிக் கொண்டிருந்தாலும், எரியும் நாக்குகளுக்கு அப்பால் இருந்த இடைவெளியை நோக்கியபடியே இருந்தன. சிறிது நேரம் உமார் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கினான். அங்கு இருந்த அவர்கள் அனைவரும் இளம் வயதினராகவும் வெள்ளை மேலாடையும் - சிவப்புக் கால்சராயும் அணிந்த கழுகுக் கோட்டைக் காவலர்களைப் போல உடையணிந்தவர்களாகவும் காணப்பட்டார்கள்! அரபியர்களைப் போல் மெலிந்த உடலும் கருந்தலையும் உடைய சில உருவங்களும், இந்துக்கள் அல்லது சீனர்கள் போன்ற பிற பல வகைகளும் தென்பட்டன.

“இவர்களெல்லாம் புதிய கொள்கைக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள். இன்று இரவு இவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விடுதலைத் திருநாள். பிறப்பு இறப்புத் தலைவரின் திருமுகத்தை இவர்கள் விரைவில் காணப் போகிறார்கள்” என்று ரக்கின் உட்டின் உமாரின் காதுக்குள்ளே ரகசியமாகச் சொன்னான். தீநாக்குகளுக்கப்பால் நடக்கப் போகும் அற்புதம் எதையோ அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.