பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290


காலடியில் கிடந்த செத்த மனிதனின் உடலை அவன் குனிந்து மேலே தூக்கினான்.

“அர்ப்பணம் செய்தவர்களே! இதோ பாருங்கள், இந்த மனிதன் சொர்க்கத்துக்குப் போய்விட்டான்” என்று அவன் கூறினான்.

உமாரைச்சுற்றிலும் இருந்தவர்கள் எழுந்திருந்தார்கள். கல் மிருகத்தின் கால் நகத்திற்கிடையிலே நின்ற ஹாஸானை அவர்கள் பார்த்தார்கள். முண்டமான அந்த உடலை அவன் தன் கைகளிலே பிடித்திருந்தான். ஆனால், அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் கூட்டத்தினரிடையே வியப்புப் பெருமூச்சு ஒன்று எழும்பியது.

அந்த முண்டத்தின் உடலிலே கத்திக்காயம் எதுவும் காணப்படவில்லை. அதன் ஆடையில் இரத்தக் கறை எதுவும் தென்படவில்லை. அணுவுக்கு அணு, வரிக்கு வரி, மயிரிழைக்கு மயிரிழை அது கத்திகளுக்கிடையே சற்றுமுன் சுழன்று கொண்டு நின்று சவமான அதே மனிதனுடைய உடல்தான்!

அந்த உடலைத் தூக்கிக்கொண்டே, அந்தக் கல் மிருகத்தின் கால்களுக்கிடையிலே சென்று நிழலிலே மறைந்து பின் சென்றுவிட்டான் ஹாஸாள்!

“வைபவம் நிறைவேறி விட்டது” என்று கூட்டத்தினர் கிசுகிசுத்துக் கொண்டார்கள். கத்தி நடனக்காரர்களும் கூட்டத்தினருடன் கலந்து கொள்வதற்காக நெருப்பைச் சுற்றிக் கொண்டு வந்தார்கள். வெள்ளாடையணிந்த அந்தக் கூட்டத்தின் ஊடே சிறுவர்கள், மது ஊற்றி நிறைந்த சடடிகளை ஒவ்வொருவருக்காக கொடுத்துக் கொண்டு வந்தார்கள். ஆவல் அதிகமுள்ள சிலர், பிறரை முந்திக்கொண்டு, கைநீட்டிக் கேட்டார்கள்.

“எல்லாக் கடவுள்களின் சாட்சியாகவும் கூறுகிறேன், இப்படிப்பட்ட ஒரு காட்சியைக் கண்ட பிறகு மது குடிப்பது நல்லது. எதையும் இறைந்து பேசாதீர்கள். இப்பொழுது அந்தக் கத்தி வீரர்கள் அந்தக் கல் எருதைக் கூட வெட்டி வீழ்த்திவிடக்கூடிய வெறியில் இருக்கிறார்கள், தாங்கள் சிறப்புக்குரியவர் என்பது அவர்களுக்குத் தெரியாது” என்று ஹாஸான் மெதுவாகக் கூறினான்.