பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294


ஒரு பழமரம் அவனைக் கவர்ந்தது. அந்த மரம் முழுவதும் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பூக்களிலே நிலவொளி பலவிதமான வண்ணங்களைப் பரப்பி யிருந்தது, திரும்பிப்பார்த்தால் அந்த நிலவைக் காணவில்லை. உமார் அதை நன்றாக அறிந்து கொண்டான். தன்னுடைய காலடியிலே பசும் புல்தரை யிருப்பதை உணர்ந்தான். அவன் தன் கைகளை நீட்டினான். அந்தக் கைகளிலே பட்டுச் சட்டையின் மிருதுவான துணி பளபளத்தது. தன்னுடைய உடலில் தோன்றிய இந்த எதிர்பாராத அழகுக் காட்சி அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அடுத்து, ஒடிக் கொண்டிருக்கும் தண்ணிர் அவன் உணர்ச்சியிற் கலந்தது. அவனுடைய கால்கள் அவன் நினைக்கும் திசையில் செல்ல மறுத்தன மிகுந்த கஷ்டத்துடன், தண்ணீர் தொடங்கும் இடத்திற்கு வந்தான். அது ஒர் ஊற்று அது ஒரு பாறையின் இடையிலிருந்து ஓடியது. அவன் அதிலே இறங்கி நீரைக் குடிக்கச்சென்றான். அதன் சுவையையறிந்த பிறகு நீண்ட நேரத்திற்கு ஏராளமாக அள்ளியள்ளிக் குடித்தான். வரண்டுகிடந்த தன் நாவை நனைத்த அந்த நீர் வெறும் தண்ணிர் அல்ல. அருமையான திராட்சை மது என்பதை அறிந்தான்.

நல்ல மது என்று கூறிக்கொண்டே நிமிர்ந்தவன் எதிரில் நிமிர்ந்து நிற்கும் சிங்கம் ஒன்றைக் கண்டான். அந்தச் சிங்கத்தை நோக்கி நேராக நடந்தான். அதன் தலையைத் தொட்டான். அது கடினமாக இருந்தது. சீனத்துப் பீங்கானில் செய்த அது, வேறு எப்படியிருக்கும்? எப்படியும் அது அசையவில்லை. உமார் அதனுடைய முதுகிலே ஏறி உட்கார்ந்து கொண்ட பிறகு கூட அது நகரவில்லை. கொஞ்சங்கூட ஐயத்திற் கிடமில்லாமல் இந்த விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று அவன் நினைத்தான். இந்தத் தோட்டத்தைப் பற்றியும் சந்திரனைப்பற்றியும் மூன்று விஷயங்களைக் கண்டு பிடித்தான்.

முதலாவது, அந்த நிலவு உண்மையான நிலவல்ல, இரண்டாவது, அந்தத் தண்ணீர் தண்ணீர் அல்ல; திராட்சை மது, மூன்றாவது அந்த மிருகங்களின் அரசனாகிய சிங்கம் சீனத்துப் பீங்கானால் செய்யப்பட்டது.

இவ்வளவு தூரம் வந்து தான் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த தன் புத்திசாலித்தனத்தைப் பற்றித் தானே