பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

தங்கியிருக்க வேண்டியதுதான் அதன்பிறகு, நீ விரும்பினால் பிரிந்து செல்லலாம்.”

சிறிது நேரம் உமார் அமைதியாக நின்றான். பிறகு “நான் யோசித்து முடிவு செய்வதற்கு ஒரு வாரம் தவணைகொடு” என்று கேட்டான்.

“நிச்சயமாக இந்தவார முடிவில் நீ கூறும் பதிலுக்காகக் காத்திருப்பேன். அதுவரையிலே இந்தக் கோட்டைக்குள்ளே உள்ள என்னுடைய அடிமைகள் அனைவரும் என் ஆணைக்குக் காத்திருப்பார்கள்” என்று ஹாஸான் கூறினான்.


37. சிக்கலைத் தீர்க்கும் சிந்தனை

தன்னுடைய அறைக்குள் வந்து உட்கார்ந்த உமார் நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்டான். இவ்வளவு விந்தையான விஷயங்களைத் தெரிந்து கொண்ட பிறகு, அவன் தனியாக இருப்பது நல்லதென்று தோன்றியது. அந்தக் கழுகுக் கூட்டுக்கு வந்த பிறகு அவன் தனியாக இருப்பது இதுவே முதல் தடவை. ஹாஸானுடைய அதிசயிக்கத்தக்க அறிவாற்றலைக் கண்டு அவன் வியப்படைந்தான். இந்தப் புதிய மதத்தைத் தோற்றுவித்த தலைவனுக்குத் தன்னைப் பின்பற்றுவோரையெல்லாம் காப்பாற்றி ஆதரிக்கக்கூடிய அளவு செல்வம் எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. அதுபற்றிய ரகசியத்தை அவன் வெளியிடவுமில்லை.

ஹாஸானுடைய பேச்சுக்களையும், அவன் தன் சக்தியின் பெருமையைப்பற்றிக் கூறியதையும் நினைக்கிறபொழுது, அவனுக்கு வேதாந்தி காசாலி கூறிய ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. “தன்னைத்தானே போற்றிப் பெருமையாகப் பூசித்துக் கொள்வதைவிட வேறு எதையாவது ஒரு பொருளைத் தொழுவது உயர்ந்தது” என்ற பொன்மொழிதான் அது. ஹாஸானுடைய திட்டப்படி பார்த்தால், பலப்பல பள்ளி ஆசிரியர்களின் மகிழ்ச்சியைப்பற்றிய விவாதங்களும், அறிஞர் பிளாட்டோவின் குடியாட்சித் திட்டமும் முட்டாள் தனமாகி விடுகின்றன.