பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

உள்ளே நுழையவில்லை என்று ஆயிரம் சத்தியம் செய்தான். மேலேயிருந்து அயீஷா கத்தினாள்: ‘தலைவரே! இங்கு வாருங்கள் இதைப் பாருங்கள்!’

மேலே விளக்குகளுடன் போய்ப் பார்த்தால், உமாரின் தலைமாட்டிலே, ஒரு குத்துக் கத்தியும், புதிதாகச் சுடப்பட்ட ஒரு ரொட்டியும் இருந்தன.

உமாருக்கு இது அதிசயமாக இருந்தது. இதன் பொருள் அவனுக்குப் புரியவில்லை யாரோ, உயிருக்குத் துணிந்து, இவற்றைக் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறான் என்பது மட்டும் தெரிந்தது. ‘ஒன்றும் புரியவில்லை கத்தி சாவுக்கு அடையாளம்; ரொட்டி வாழ்வுக்கு அடையாளம் என்று வைத்துக் கொண்டாலும் விஷயம் விளங்கவில்லையே’ என்று இஷாக் யோசித்தான்.

‘பகலில் பார்க்க வருவோரிடம் இலஞ்சம் வாங்க விழித்துக்கொண்டிருப்பாய், இரவில் திருடர்கள் வரும்போது குறட்டை விடுவாய் நீ என்ன காவல் காக்கிறாய்?’ என்று அயீஷா, இஷாக்மேல் எரிந்து விழுந்தாள். அதற்குள்ளே இஷாக் அங்கே கிடந்த தாள் ஒன்றையெடுத்து உமாரிடம் கொடுத்தான் அதிலே,

‘உன் நாக்குப் பற்களுக்கு இடையே இருக்கவேண்டும்’ என்று எழுதியிருந்தது.

‘அயீஷா அதிகம் பேசுகிறாள். அவளுக்குத்தான் இந்த எச்சரிக்கை என்று இஷாக் கூறினான்.

ஆனால் இது தனக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கை என்று உமார் உணர்ந்தான். தான் இதுவரை, கழுகுக் கூட்டைப்பற்றி யாரிடமும் கூறாதபோது. இந்த ஹாஸான் தனக்கு ஏன் எச்சரிக்கை செய்யவேண்டும் என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால், இந்த எச்சரிக்கையின் முழுவிவரமும் பொழுது விடிந்த பிறகு உமாருக்குத் தெரியவந்தது.

பொழுது விடிந்து சிறிது நேரம் ஆனதும் டுன்டுவினுடைய ஒற்றன் ஒருவன், உமாரிடம் வந்து சலாம் செய்தான். ‘சுல்தானின் நிழல் போன்றவரே! அதிகாலையில் நகரைச் சுற்றி வரும்போது தங்களுடைய ஆள் ஒருவன் ஓரிடத்திலே பிணமாகிக் கிடப்பதைக் கண்டோம். இங்கே தூக்கி வந்திருக்கிறோம்’ என்றான்.