பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340


‘அவர்கள் தந்திரத்தையும் மாயக்கண்கட்டு வித்தையையும் உபயோகிக்கிறார்கள் அவர்களுடைய ஆயுதமான இரகசியத்தை அடிப்பதற்கு அடித்து உடைப்பதற்கு ஒரு வழியிருக்கிறது.’

‘நீங்கள் அவர்களைத் தேடப்போகிறீர்களா?’

‘இல்லை, அவர்கள் தாங்களாகவே வெளிவரப் போகிறார்கள்.’

உமாரிடம் ஏதோ இரகசியமான சக்தியிருக்கிறது என்பதை டுன்டுஷ் நம்பினான். உமார் மாயத்தை எதிர்க்கும் மாயாவாதி என்று எண்ணினான்.

‘தலைவரே! இதுவரை நான் சொன்ன விஷயங்களுக்கே என் உயிர் அடமானத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மறைந்திருக்கும் சக்திகளோடு நான் மோதிக்கொள்ள விரும்பவில்லை எனக்கு விடை கொடுங்கள்’ என்று கூறிவிட்டு வெளியேறினான்.


42. செத்தவன் பேசினான்! பேசினவன் செத்தான்!

ஜம்மி மசூதியிலே கடைசித் தொழுகை நடந்து கொண்டிருந்தது, நூற்றுக்கணக்கான மத நம்பிக்கையாளர்கள் எல்லாம் வல்ல இறைவனான அல்லாவை நோக்கித் தங்கள் பிரார்த்தனைகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக ஆண்டவனைத் தொழுது கொண்டிருந்தான் ஓர் அராபியன். கூட்டம் வெளியேறியபோது, அவனும் வெளியேறினான். மசூதிக்குப் பின்புறமுள்ள வீதியில் திரும்பி மூன்றாவது வீட்டிலேபோய்க் கதவைத் தட்டினான்.

கதவோரத்திலே இருந்த ஒரு குருடன், ‘நீயார்’ என்று கேட்டான்.

‘அக்கினி புத்திரனுடைய வீடு இதுதானே?’

‘ஆம்! அக்கினி புத்திரனுக்கும் உனக்கும் என்ன தொடர்பு?’

‘சொர்க்கத்தைக் கண்டுவந்த ஒரு மனிதன் இங்கே இருப்பதாகக் கூறினார்கள்.’