பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348


ஆனால் வட்டமேடை புதிதாகப் பார்ப்பவர்களுக்கு, அது ஒரு மேடை என்று தெரியாதபடி, தரையோடு தரையாக அமைக்கப்பட்டது.

உமாருடைய நண்பன், இந்துவாக இருந்த வேதாத்தி காசாலி இப்போது நிசாப்பூர் கல்லூரி தலைமைப் பேராசிரியனாக இருந்தான். இஸ்லாத்திலே சேர்ந்து பெரும் பெயரும் புகழும் அடைந்து, ‘இஸ்லாத்தின் சான்று’ என்று பெரும் சிறப்புப்பெயர் எடுத்துவிட்டான். அவன் ஒரு கருத்துச் சொன்னால் இஸ்லாமிய உலகம் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடிய அத்தனை பெரிய செல்வாக்கு அடைந்திருந்தான்.

எனவே உமார் அவனுடைய ஆதரவைத் தேடிக் கொண்டால் தன்னுடைய கண்டுபிடிப்புக்கு நாடெங்கும் செல்வாக்கு ஏற்பட்டு முல்லாக்களின் ஆதரவும் கிடைக்கும் என்று எண்ணினான். அதோடு அந்த வேதாந்த உண்மைகளை ஆய்ந்து ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை வாய்ந்தவன் என்று உமார் ஏற்கெனவே பழகித் தெரிந்து கொண்டிருந்தான். ஆனால் காலப்போக்கு அவனுக்குப் புகழளித்ததோடு மனமாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது என்பதை உமார் அறிந்து கொள்ளவில்லை!

காசாலியின் ஆதரவைப் பெறுவதற்காக அவனுக்கு விஷயத்தை விளங்க வைப்பதற்காக உமார் காசாலியை தன் ஆராய்ச்சிக் கூடத்திற்கு அழைத்தான். ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்த பேராசிரியர்கள் காசாலியை சகல மரியாதைகளோடும் வரவேற்றார்கள்.

உமாரும் தன் கையாலேயே அந்த வேதாந்திக்கு சர்பத்தும் பழங்களும் கொடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தான்.

வேடிக்கை பார்த்திருந்த கூட்டம் கூடத்திலே ஒரு புறத்திலே உட்கார்ந்திருந்தது. உமார், வேதாந்தியை அழைத்துச்சென்று கூடத்தின் நடுவிலே நிறுத்தி சுவர்ப்புறத்தைக் காண்பித்தான். சுவரில் இருந்த சித்திரங்களைப் பார்த்துக்கொண்டே, அந்த மேடையில் சுற்றிவந்த காசாலி ‘இதென்ன வானவீதியின் அமைப்பு இங்கே மேஷம், ரிஷபம் முதல் மீனம் ஈறாக உள்ள பனிரென்டு இராசிகளை வரைந்திருக்கிறாய். இவற்றைக் காட்டத்தானா என்னை அழைத்து வந்தாய்?’ என்று கேட்டான்.