பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

349


‘இல்லை, இதோ முதல் இராசியைப் பார்த்துக்கொண்டு நில்லுங்கள், அந்த மேஷத்தையே பார்த்துக் கொண்டு அசையாமல் நில்லுங்கள். ஓர் அடிகூட நகராதீர்கள், பயப்படாமல் நில்லுங்கள், எந்தவிதமான துன்பமும் ஏற்படாது. ஆனால் இந்த இராசிகளும் ஏன் இந்தக் கோட்டை முழுவதுமே தங்களைச் சுற்றிவரப்போகிறது’ என்று கூறிவிட்டு உமார் தன் இருக்கைக்குச் சென்றான்.

கோபுரமாவது, சுற்றுவதாவது உமார் விளையாட்டுக்குச் சொல்லுகிறான் என்று காசாலி நினைத்தான். ஆனால் உமார் தன் இருக்கையில் இருந்தபடியே கைகளைத் தட்டினான். காசாலியின் காலுக்குக் கீழே, ஏதோ கிரீச்சிட்டது. அவன் உடல் ஒரு குலுங்குக் குலுங்கியது. என்ன ஆச்சரியம், கோபுரம் அப்படியே தரையோடு சேர்ந்து சுழலத் தொடங்கியது. நேரம் ஆகஆக வேகமாகச் சுழன்றது, கோபுரத்தோடு சேர்ந்து மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய பன்னிரெண்டு ராசிகளும் சுழன்றன. காசாலி பயந்துபோய்க் கூச்சலிட்டான். ஒரு சிறிய அதிர்ச்சி ஏற்பட்டது. காசாலி கீழே விழுந்தான், சுற்றுவதும் நின்றது.

‘ஆய்வல்லா! ஆண்டவனே! உண்மையாகவே இந்தக் கோபுரம் சுழன்றதே!’ என்று வியந்தான்.

அவனுடைய மாணவன் ஒருவன் ‘ஆசிரியரே! கோபுரம் சுழலவில்லை. நீங்கள்தான் சுழன்றீர்கள். நாங்கள் பார்த்தோம்!’ என்று கூறினான்.

‘இல்லை, நான் நகரவேயில்லை.’

நீங்கள் நகரவேயில்லை, நீங்கள் நின்ற இடம் சுழன்றது. இத்தனை பெரிய கட்டிடம் சக்கரம்போல் சுழலுமா? சுழலும்படி செய்யத்தான் முடியுமா? என்று உமார் கூறினான்.

‘நான் நின்ற இடம் எப்படிச் சுழலும்?’

‘இதோ இந்த மரத்துணைக் கீழே இருந்தபடி சுற்றினால் நீங்கள் இருந்த இடம் சக்கரம்போல் சுழலும். நான் கையைத் தட்டியதும், கீழே இருந்த என் வேலைக்காரர்கள் இதை சுழற்றினார்கள்!’