பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

359


‘சரி! எனக்கு என்ன தீர்ப்பு?’

தன்னுடைய தாடியைத் தடவிக்கொண்டே சிறிதுநேரம் யோசித்துவிட்டு, அந்த உலேமாத்தலைவர், ‘ஆண்டவனுடைய சோதனையால் துன்பமுற்றுப் பைத்தியம் பிடித்துத் திரிகறாய் என்று சில நீதிபதிகள் கருதுகிறார்கள். அதைப்பற்றி எனக்கொன்றும் தெரியாது. நீ சுதந்திரமாக எங்கும் இருக்கலாம். ஆனால், நீ நிசாப்பூரையும் இஸ்லாமியக் கல்லூரிகளையும் விட்டுவிலகிச் சென்று விடவேண்டும்.’

‘எத்தனை நாளைக்கு?’

‘என்றென்றும்!’

காவலர்கள் அவனைவிட்டுப் போய்விட்டார்கள். உமார் அங்கிருந்து எழுந்து நடந்தான்.

‘மதத்துரோகி நம்பிக்கையில்லாதவன்!’ என்று யாராரோ ஏதேதோ கூறி வைதார்கள். ஒன்றையும் கவனிக்காமல், புத்தக வியாபாரிகள் இருக்கும் வீதிவழியே சென்றான்.

ஊற்றுக்கேணியின் அருகிலே வந்தான். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னாலே, அந்த இடத்திலே அவன் யாஸ்மிக்காகக் காத்திருந்தான்.

அப்பொழுது, யாராரோ அந்த வழியிலே போனவர்கள் எல்லோரும் விளக்கொளியில் வந்து நகர்ந்துமறையும் வெறும் நிழல்கள்போல் தோன்றினார்கள். இன்றும் பலர் அந்தப் பாதையில் நடமாடினார்கள். இப்பொழுது அவர்கள் உண்மையாகவும் தான் எவ்விதக் குறிக்கோளும் இல்லாமல் அசையும் ஒரு நிழல் போலவும் தோன்றியது. நெடுநேரம் அங்கிருந்துவிட்டு, அயீஷாவைத் தேடிவந்தான்.

அயீஷா அழுது கொண்டிருந்தாள். அவனுக்காக அழக்கூடியவள் அவள் ஒருத்திதானே! அவளுக்குப் பயமாகவும் இருந்தது. இங்கு மூலைமுடுக்கெல்லாம் மக்கள் உமாரைப்பற்றிப் பேசிக்கொள்வதைப் பார்த்தால் எந்த நேரத்தில் என்ன நேரிடுமென்று கூறமுடியாது.

எனவே அவள், இருக்கின்ற சில பொருள்களையும் பொன்னையும் எடுத்துக் கொண்டு, தன்னோடு காசர்குச்சிக் அரண்மனைக்கு வந்து விடும்படி கேட்டுக் கொண்டாள்.