பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364

இஷாக்கும், அயீஷாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

தங்கள் எண்ணத்தை உமார் அறிந்துகொண்டு விடுவான் என்பது அவர்கள் எதிர்பார்த்ததே! ஆனாலும், அவன் கேட்டபோது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘ஆம்! பெட்டி நிறையப் பொன்னும், நகைகளும் அவளிடம் இருக்கின்றன.’

‘சரி! ஐயா கிழவரே! நீங்கள் சாட்சி, நிசாப்பூர் உலேமாத் தலைவரிடம் போய் நீங்கள் சாட்சி சொல்லுங்கள். என்னுடைய எல்லாச் சொத்துக்களையும், என்னுடைய அடிமைப் பெண்ணான அயீஷா வுக்கும் என் வேலைக்காரன் இஷாக்குக்கும் உடைமையாக்குகிறேன், அழைத்துச் செல்லுங்கள்’ என்றான் உமார்.

இதைக் கேட்டதும், அவர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். இஷாக் பரபரப்புடன், ‘தலைவரே! தங்களுக்கு?’ என்று கேட்டான்.

அவனுக்கு என்று என்ன இருக்கிறது? அவனுடைய புத்தகங்கள் தடைப்படுத்தப்பட்டுவிட்டன. அவனுடைய ஆராய்ச்சிக் குறிப்புகள் தீக்கிரையாகி விட்டன. அவனுடைய பஞ்சாங்கம் அகற்றப்பட்டுவிட்டது.

அவனும் இஸ்லாமியக் கல்லூரிகளிலிருந்து நாடு கடத்தப்பட்டான். அவனுக்கு என்று என்ன இருக்கிறது?

‘அந்த உலேமாத் தலைவரிடம், நான் என் ஒட்டகச்சாரியுடன் அலெப்போ நகருக்குப் போவதாகச் சொல்லுங்கள். நீங்கள் நிசாப்பூருக்குப் போங்கள். எல்லோரும் போங்கள்.’

அவர்கள் குதிரைகளிலே ஏறிக் கொண்டார்கள். அயீஷா அழுதாள்.

‘உனக்கு என்ன வந்துவிட்டது?’ என்று இஷாக் கேட்டான்.

‘தெரியவில்லை! ஆனால், அந்தப் பொன்னெல்லாம் உண்மையில் எனக்குத்தானா?’

‘உறுதியாக! தலைவர்தான் கூறிவிட்டாரே!’