பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

 அவர்களுடைய புத்தகக் கடையில் எல்லாவிதமான பழைய புத்தகங்களும் இருக்கும். அந்த வீதியிலே புத்தக வியாபாரிகள் அதிகம். காரணம், அந்த வீதியின் கோடியில்தான் பள்ளி வாசலும், அதையடுத்து ஒரு பள்ளிக் கூடமும் இருந்தன. பள்ளிக்கூடம் விட்டதும் பையன்கள் கத்திக் கொண்டே ஓடுவார்கள். இது யாஸ்மிக்குப் பிடிக்காது. சில சிறுவர்கள் புத்தகக் கடைக்கு வருவார்கள். அவளுடைய தகப்பனார், புத்தகங்களின் முக்கியமான பகுதிகளை அவர்களுக்குப் படித்துக் காட்டுவார். அப்போதெல்லாம் யாஸ்மி அவற்றைக் கவனிப்பாள். ஆனால், புரிந்துகொள்ள முயற்சிப்பதுமில்லை. கண்ணுக்குத் தெரியாத எவரெவரையோ பற்றியும் அவர்கள் முன்னே தொங்கும் திரையைப் பற்றியும், இரவு நேரத்திலே ஆகாயத்தில் தோன்றும், அதிசய வாத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டியது, ஆடவர்களின் வேலையாக இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு அதில் என்ன அக்கறை வேண்டியிருக்கிறது? பெண்ணுக்கு ஆத்மா இல்லையென்று கருதப்படுகிறபொழுது அவள் வாழ்வு முடிந்தபின், பூனையும் குதிரையும் போகிற இடத்திற்குப் போய்ச் சேர வேண்டியது தானே? ஐந்து வேளையும் அயராமல் தொழுகை புரியும் ஆடவர்கள் போகும் இடத்துக்குப் போக முடியுமா?

அப்படி வருகிற பையன்களிலே, வயது வந்த இரண்டு பையன்கள் அடிக்கடி அவர்களுடைய புத்தகக் கடைக்கு வருவதும் ஏதாவது புத்தகங்கள் வாங்குவதும் பழக்கம். அவர்களிலே உயரமாக இருந்தவன் பெயர் ரஹீம்.

ரஹீம்சேடா என்பது அவன் முழுப் பெயர். அவனுடைய தந்தை நிஜாப்பூரிலே ஒரு நிலச்சுவான்தார். ரஹீம் அழகாக இருப்பான். அவனை யாஸ்மிக்குப் பிடித்திருந்தது. ஒரு நாள் ரஹீம் அவர்கள் கடையில் ஒரு புத்தகம் வாங்கினான். அந்த புத்தகத்தின் அட்டையில், ஒரு சுல்தான் படம் போட்டிருந்தது. சுல்தான் குதிரை மீது இருந்தபடி, வாளை வீசி, ஒரு மதவிரோதியான மேலை நாட்டானின் கழுத்தைச் சீவிக் கொண்டிருக்கிறான். அந்தப் படம் ரஹீமுக்கு அதிகம் பிடித்ததாக இருக்க வேண்டும். அந்தப் படத்துக்காகவே அவன் அதை வாங்கியிருக்கவும் கூடும்.