பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

ஆனால், சுல்தான், சண்டை, மத விரோதி போன்றவையெல்லாம் ஆடவர் உலகத்தைச் சேர்ந்த விஷயங்கள். யாஸ்மிக்குப் புரியாதவை. புரிந்தாலும் பயனில்லாதவை.

அவள் நேருக்கு நேரே பார்த்ததெல்லாம் சில சமயங்களில் அந்த வீதி வழியாகப் போகும் ராஜ அமீர்தான்! வெள்ளைக் குதிரையொன்றின் மீது வீரவாளுடன் செல்லும் அமீரைத்தான் அவள் பார்த்திருக்கிறான். அந்த அமீர், ராஜ உடையும், வெல்வெட்டுப் பட்டயமும் அணிந்திருப்பான். அவனைத் தொடர்ந்து, பத்துப் பன்னிரெண்டு துருக்கிய வீரர்கள் தூக்கிப்பிடித்த வாளுடன் செல்வார்கள்.

யாஸ்மி, தன் கணவனாக வருபவனும் அந்த அமீரைப் போல் இருக்கவேண்டுமென்று கனவு கண்டிருக்கிறாள். என்றாவது ஒரு நாள் வீதியிலே செல்லும் இளவரசனான அவன், தன்னைப் பார்த்துத் தன் அழகில் மயங்கித் தன் தகப்பனாரிடம் வந்து பெண் கேட்பான். வெள்ளிக் காசுகளும் ஒளி வீசும் நவரத்தினக் கற்களும் அள்ளி அள்ளித் தன் தகப்பனாருடைய பையில் கொட்டி நிரப்பி விட்டுத் தன்னையும் அந்த அழகான வெள்ளைக் குதிரையிலே தூக்கி வைத்துக் கொண்டு போய்விடுவான். ஆற்றங்கரையின் அருகிலே உள்ள அரண்மனையொன்றிலே தன்னைக் கொண்டுபோய் ராணி போல் வைத்திருப்பான். அங்கே தெள்ளிய நீர் தடாகங்கள் இருக்கும். அவற்றிலே வெள்ளை நிற அன்னப் பறவைகள் மிதந்து வரும். வாசலுக்கு வாசல் பலகணிக்குப் பலகணி பட்டுத் திரைச் சீலைகள் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கும். வெள்ளித் தட்டுக்களிலே விதவிதமான பழங்களைக் கொண்டு வரும் வேலைக்காரிகள் அவள் ஆணைக்குக் காத்துக் கிடப்பார்கள். வெள்ளைக் குதிரை வீரனான அந்த இளவசரன் உள்ளங் கொள்ளை கொண்ட தன்னையே சுற்றிச் சுற்றி ஓடி வருவான். மற்ற மனைவிகளை மதிக்க மாட்டான். தனக்குப் பிறக்கும் குழந்தைகளையே அதிகமாக நேசிப்பான். இவ்வளவிருந்தும், அவன் சிரிப்பதே கிடையாது. இளவரசர்கள் சிரிப்பதில்லை போலிருக்கிறது! வீதியில் எப்போதாவது போகும் அந்த அமீர் சிரிப்பதேயில்லையே? ஆனால் இந்த ரஹீம் மட்டும் அதிகமாகச் சிரிக்கிறானே...?