பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

உயர்நிலைப்பள்ளி நூலகம்


மாணவரும் வந்து அமரவும், அமர்ந்து எழுதவும் பயன்படுவன ஆள் இருக்கைகள். இனி, இவை ஒவ்வொன்றும் எப்படி அமைய வேண்டுமென்பதைப் பார்ப்போம்.



அலமாரிகள்


அலமாரிகள், அசையும் அலமாரி, அசையா அலமாரி என இரண்டு வகைப்படும். அசையும் அலமாரி என்பது தனியே செய்து தரைமீது வைத்திருக்கும் அலமாரி; அசையா அலமாரி என்பது சுவரில் பதிக்கப்பட்ட அலமாரி. சுவரில் பதிக்கப்பட்டிதனைவிட அசையும் அலமாரியே நன்கு பயன்படுவது. எங்ங்னம்? விளக்குவோம்.

சுவரில் அலமாரியை அமைக்கும்பொழுது சாளரங்கள், வாயில்கள் ஆகியவற்றின் இருப்பிடம் நோக்கி அவையில்லா எஞ்சிய இடங்களில்தான் அமைக்க முடியும். இதனால் வேண்டிய அளவிற்குச் சுவரில் அலமாரியைப் பதிக்க முடியாது. அவ்வாறு இடையூறையும் பொருட்படுத்தாது அமைத்த அலமாரியின் தட்டுக்கள் ஏழடிக்குமேல் இருந்துவிட்டால் நமக்கு எட்டவுஞ்செய்யாது.

அசையும் அலமாரிகளை அமைப்பதனால் இந்த இடையூறுகள் எல்லாம் இல்லை. வேண்டிய அளவுக்கு வேண்டிய வசதியுடன் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் தற்போது அசையும் அலமாரிகளே பெரும்பாலும் பயன்படுத்தப் படுகின்றன.

பள்ளிநூலகங்களிலுள்ள அலமாரிகள் அவ்வளவும் திறந்தவையாகவும், நூல்களை அடிக்கடி ஒழுங்குபடுத்தற்கு ஏற்றவையாகவும் இருத்தல் வேண்டும்.

அலமாரிகள் மரத்தாலும் இரும்பாலும் செய்யப்படும். மரத்தாலானவை வசதி மிக்கவை என்று கூறப்படுகின்றன.