பக்கம்:உயிரில் கலந்தது.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17.காதல்-ஒரு தத்துவம்!

ல்ல எண்ணங்களையும், மனிதத் தன்மைமிக்க மனத்தையும், உயர்வான நடவடிக்கைகளையும் அருளும்படி மனம் கனிந்து பிரார்த்தித்துப் படுத்தார் ஞானசீலன். அதே பிரார்த்தனையைத் திரும்பவும் அவர் படித்த நேரத்தில் பொழுது விடிந்தது.

வெள்ளிக்கிழமை.

கோசலை அம்மாள் குளித்து முழுகி, வீட்டைக் கழுவிச் சுத்தம் செய்துவிட்டுப் பலகாரம் செய்தாள்.

ஞானசீலன் அன்று தினம் மிகுந்த சுறுசுறுப்புடன் நடமாடினார். வாணியின் துய்மையான அழகு முகத்தில் விழிப்பதற்காகவே தம்மையும் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற துடிப்புக் கொண்டார். நீராடினார். சுவாமி தோத்திரம் பாடினார். இட்டிலி சாப்பிட்டார். அன்றையத் தபால் வந்தது. புத்தகம் போடுவதற்கு முன் வந்து, ஆனால் ‘கூலி’ தருவதற்கு மாத்திரம் முன் வராத பதிப்பகத்தாருக்கு வேண்டி அளவுக்கு ‘மாப்பு’ கொடுத்தும் பலன் ஏற்படாமல் போகவே, ‘லாயர் நோட்டீஸ்’ அனுப்பிவிட்டு வந்திருந்தார். மனிதர் இறங்கி வந்தார். இரங்கியல்ல-இறங்கி!...பணம் அனுப்புகிறாராம்!...அன்புக்குச் சட்டம் இல்லையென்றால், அதற்காக, அன்பின் சட்டத்தையே உடைத்தெறிய முற்பட்டால், பிறகு அதிகாரச் சட்டத்தை நாடவேண்டியதுதானே! ‘தமிழரசி’ பத்திரிகையின் அதிபரிடமிருந்து தனிப்பார்வைக் கடிதம் ஒன்று வந்தது. நேரில் தெரிவித்த கலியான சமாசாரத்தை நினைவுகூட்டி முடிவைத் தெரிவிக்கும்படி குறித்திருந்தார். நேற்றுத்தான் பதில் எழுதியிருக்கிறேன்!'

அடுத்த உறை, திரைப்படக் கம்பெனியின் முத்திரையைப் பெற்றிருந்தது. அது, ஞானசீலன் எழுதிய ‘தமிழரசி’ என்ற