பட்டணம் கை
75
அசையாது நின்றுகொண்டு எல்லாவற்றையும் கவனித்தேன்.
“அப்பொழுது எனக்குப் பக்கத்தில் இரண்டு மனிதர்கள் வந்து நின்றார்கள். ஒருவன் தன் கையில் ஒரு கடிகாரத்தைக் கட்டிக்கொண்டிருந்தான். மற்றவன் அதை விலைக்குக் கேட்டான். ஐம்பது ரூபாய் வேண்டுமானால் கொடுக்கிறேன்; அதற்கு மேலே என்றால் எனக்கு வேண்டாம் என்றான் அவன். எனக்குத் தெளிவாகக் கேட்கும் படி அவர்கள் வெளிப்படையாகத்தான் பேசினார்கள்; இரகசியமாகப் பேசவில்லை. அந்தக் கடைவீதி இரைச்சலிலே மெதுவாகப் பேசினால் எப்படிக் கேட்கப் போகிறது?
“இவ்வளவு குறைச்சல் விலைக்குக் கேட்பது நியாய மில்லை; நமக்குள் இருக்கிற சிநேகிதத்தை மனத்தில் வைத்துக்கொண்டு கேள்” என்றான் மற்றவன்.
“இஷ்டமிருந்தால் கொடு; நான் உன்னைக் கட்டாயப் படுத்தவில்லையே?” என்றான் விலைக்குக் கேட்கிறவன்.
விற்கிறவனுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘அவசரம் ஆபத்திற்கு உன்னையெல்லாம் நம்பினால் இப்படித்தான்; தலையில் மிளகாய் அரைத்துவிடுவாய்; உனக்கும் ஒரு ஆபத்து வராதா? அப்பொழுது பார்த்துக்கொள்கிறேன்’ என்று கடுமையாகப் பேசிவிட்டு அவன் வேகமாக நடந்தான். அவன் எங்கே போனானென்று தெரியவில்லை. சட்டென்று மறைந்துவிட்டான்.
“மற்றவன் அவனைத் தேடிக்கொண்டே அங்கும் இங்கும் அலைந்தான். பிறகு கவலையோடு என்னிடம் வந்து,